ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்
எக்கலையைக் கற்று எந்நிலையடைந்த போதும் நாம் நம்மையறியும் கலையாகிய ஞானக்கலையை யறிதல் மிக அவசியமாகின்றது.
ஞானமே நம்மைப் பூரண மனிதராக்கவல்லது.
ஞானமே சர்வ ஆசாபாசங்களிலிருந்தும்
நம்மை நீக்கிக்கொள்வது.
-சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்-
ஜமாலிய்யா தோட்டத்தில்
கொய்த மலர்
இஸ்லாத்தில் ஆன்மீகக் கலை இல்லையெனக் கூறி இஸ்லாத்தை இழிவு படுத்துவர். அவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய தத்துவத்தையே அறியாது, அறியாதார் சொற்கேட்டு வழிகெட்டுப்போகும் அப்பாவிகள். ரஸூல் நாயகம் அவர்களுக்கு முன் வந்த வேதங்களில் ஏகத்துவக்கலை ஒழுங்குபடுத்தப்படாதிருந்தது. அதனாலேயே மனிதனைக் கடவுளெனக்கருதி வணங்கும் நிலை ஏற்பட்டது.
எந்த நபியும் தன்னை வணங்கும்படி கூறவில்லை. ஆயினும் மக்கள் வணங்கத் தொடங்கினர். எம்பெருமானார் முழுமையே இறை; மற்றனைத்தும் அதன் பகுதிகளே எனக்கூறி, முழுமையான இறையையே வணங்குங்கள்; அதன் பகுதிகளை வணங்காதீர்கள். அது ஷிர்க்கெனும் இணைவைத்தல் என விளக்கம் பகர்ந்தமையாலும் தன்னை வணங்காதீர்கள் என்று கூறியமையாலும் விக்கிரகவணக்கங்கள் நிக்கிரகம் செய்யப்பட்டன. அன்றோடு மனிதனையோ விக்கிரகங்களையோ வணங்கிவந்த வணக்கத்திற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதையறியாத சிலர் ஏகத்துவ ஞானம் அல்லது ஸூபிஸம் என்பது மனிதனை வணங்கும் கலையென சிறுபிள்ளைத்தனமாகக் கூறுவது அன்னியர் மத்தியில் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும். அந்தக் கலையை அறியாவிட்டால் அறிந்தவரிடம் அறிந்துகொள்ள முயற்சி எடுக்கவேண்டும். அல்லது மவுனமாக இருக்க வேண்டும். வேத தத்துவார்த்தங்களைக் கொலைசெய்யத் துணிவது பகுத்தறிவற்ற செயலாகும்.
வாழ்கநம் தீட்ச தர்கள்
வாழ்கநம் பக்தர் கோடி
வாழ்கநம் மக்க ளெல்லாம்
வாழ்கநம் ஏக ஞானம்
ஆழ்கநஞ் ஞானந் தன்னில்
அறிவிலா எதிரிகள் தாம்
வீழ்கவே வீழ்க என்றும்
வாழ்கநம் ஞான மாமே
(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)