உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
இச்சமர் நிகழுங் காலை
இகற்படைத் தலைவ ரான
அச்சமி லாத ஸுப்யான்
அருணபி தம்மை நோக்கி
நச்சுதிர் கிளவி கொண்டு
நபியுயி ரோடு ளாரா
நிச்சலு முமரு ளாரா
நிலைத்தன ராவென் றாரே.
கொண்டு கூட்டு:
இச்சமர் நிகழும் காலை இகல் படைத்தலைவரான அச்சம் இல்லாத ஸுப்யான் அருள்நபி தம்மை நோக்கி நச்சு உதிர் கிளவி கொண்டு நபி உயிரோடு உ(ள்)ளாரா? நிச்சலும் உமர் உ(ள்)ளாரா? நிலைத்தனரா என்றாரே.
பொருள் :
இப்போர் நடைபெறும் பொழுது பகைப்படையின் தலைவரான பயமிழந்த ஸுப்யான் என்பார் அருள்மிக்க நபிகள் நாயகம் அவர்களை நோக்கி நஞ்சினை உதிர்த்துகின்ற சொல்லால் நபி உயிரோடு இருக்கிறாரா? சந்ததமும் உமர் உள்ளாரா? நிலைத்திருக்கின்றனரா? என்றார்.
குறிப்பு :
சமர் : யுத்தம். அருணபி : அருள் + நபி. நச்சு : நஞ்சு. கிளவி : சொல். நிச்சலும் : எப்போதும். நிலைத்தனரா: நிலைத்துள்ளார்களா.