• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  புதுமைகள் சொன்ன பூரணர்


மாயவிருந்து

புதுமைகள் சொன்ன பூரணர்

 

ஆலிம் புலவர்


 

        இரண்டு சிறுவர்கள் விளையாட்டுக் கருவி இணைத்த தொலைக்காட்சிப்பெட்டியில் ஜாய் ஸ்டிக்கினால் ரெஸிலிங் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பெரிய பிளேயர்கள் இந்தச் சிறுவர்களின் விருப்பத்திற்கேற்பஒருவரை ஒருவர் அடித்தார்கள், உதைத்தார்கள்,குத்தினார்கள்.  அடித்த அடியில்இரத்தம் கூட வழிந்துகொண்டிருப்பது தெரிந்தது. டி.வி.க்குள் தெரிந்த வீரர்கள் வென்றார்கள், தோற்றார்கள்,வெகுநேரம் விளையாடிய சிறுவர்கள் டி.வி.யை அணைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள்.


      நான் யோசித்துப்பார்த்தேன்.


      இவ்வளவு நேரம் வீராவேசமாகவிளையாடிய அந்த வீரர்கள் எங்கே? டி.வி. யைஅணைத்ததும் காணாமல் போய்விட்டார்களே!


      சுவிட்சைப் போட்டால்மீண்டும் தோன்றிவிடுவார்கள். எங்கே போகிறார்கள்? எப்படி வருகிறார்கள்? எல்லாமே மாயமாக இருக்கிறதே! ஆம்!மாயம்தான்!


      முகலாயச் சக்கரவர்த்திஷாஜஹான் மும்தாஜை உயிருக்குயிராய் நேசித்தார். மனைவியான பின்னும் மாறாக்காதல் கொண்டிருந்தார்.மும்தாஜின் அழகில் - அசைவில் - பண்பில் - பழக்கத்தில் மனதைப் பறிகொடுத்திருந்தார்! தான் ஒருநாள் திடீரென ஷாஜஹானைத் தவிக்கவிட்டு மும்தாஜ் மரணத்தின் மடி சேர்ந்தாள்.  ஷாஜஹானால் நம்ப முடியவில்லை.  மும்தாஜ்! அருமைத் துணைவியே! உன் தோற்றம் எங்கேமீண்டும்மீண்டும் பார்க்கச் சொல்லும் உன் அழகு வதனம் எங்கே? என்னில் கலந்துவாழ்ந்த நீ மண்ணிலும் கலந்து வாழ எப்படி முடியும்? அன்பே மும்தாஜ்!எல்லாமே மாயை தானா? நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் - நீ காட்டிய அன்பெல்லாம்- நீ பேசிய வார்த்தையயல்லாம் பொய்தானா? எல்லாமே மாயை தானா?


      ஆம் மாயைதான்! மாயைதான்!


      இறைத் தேடலுள்ளோரிடையேஅதிகம் பேசப்படும் வார்த்தை மாயை - மாயம் என்பதாகும்.


மாயை என்பது என்ன?


எல்லாமே இருக்கும். ஆனால் இருக்காது! அது எப்படி?


இல்லாதது எப்படி இருக்கும்?


இருப்பது எப்படி இல்லாமல் போகும்?


அதில் தான் ஓர் உண்மை ஒளிந்திருக்கிறது!


இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவது தான் சத்தியம் - உண்மை- நிச்சயப் பொருள்.  உலகத்தை அல்லாஹுதஆலாகுரூர் என்று கூறுகிறான். என்ற சொல்லுக்குப் பொருள் மாயை! வேறொரு இடத்தில் “உலகம் வீணும்விளையாட்டும்தான்” என இறைமறை பேசும்.

பாரதியார் இதே கருத்தை யயாட்டி “உலகின்பக் கேளி” என்பார்.


      இரவு! கனவில் ஒபாமாவுடன்கைகுலுக்குகிறோம்.  விழித்துப் பார்த்தால் காலில்லாதகட்டிலில் படுத்திருக்கிறோம்!


      அமெரிக்கா எங்கே? ஒபாமா எங்கே? நாம் கண்டதுஎங்கே? கை குலுக்கியதெல்லாம் உண்மைதான். ஆனால் எல்லாமே பொய்.


      அமெரிக்கா பொய்- ஒபாமா பொய்.


      ஆனால் அதனைக்கண்டநாம் உண்மைதானே!


      அதுபோலத்தான் சத்தியத்தில்தான் இந்த மாயையும் - மாயமும் சல்லாபக் கண்ணாமூச்சி நடத்துகிறது.


      அவ்லியா நாயகம்அவர்களிடம் கேட்கப்பட்டது.  எல்லாமே மாயைதானே!ஆனால் இல்லாத மாயைக்கு இத்தனை வலிமை, வல்லமை வந்தது எப்படி?


அவர்கள் சொன்னார்கள்.


      மாயையும் ஹக்கல்லவா!அதனால் தான் அந்த உண்மைக்கு இத்தனை வல்லமை வந்தது.


      இந்த மாயையை விளங்கிக்கொள்ளும் இடத்தில் தான் சரியான குருவின் வழிகாட்டலில்லாதவர்கள்  வழிதவறிப்போனார்கள். பெண்ணாசை - பொன்னாசை - மண்ணாசை அனைத்துமே பொய் என உலகை வெறுத்து காட்டுக்குள்ஒதுங்கி வாழ்ந்தார்கள்.


      ஆனால் காமிலான  ஷைகைக் கரம் பிடித்தவர்கள் இந்த மாயையும் ஹக்குதான்என்ற விளக்கத்தைப் பெறும்போது அதனை ரசிக்கத் தொடங்குகிறார்கள்.  ஹக்கின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இவர்களும் கலந்துவிளையாடுகிறார்கள்.


      மகாகவி பாரதியாருக்குஇந்த மாயைபற்றி சந்தேகமும் தெளிவும் ஏற்பட்டபோது,


      “நிற்பனவே நடப்பனவேபறப்பனவே! நீங்களெல்லாம் கற்பனை தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?” எனப்பாடி இறுதியில்,


      இவையயல்லாம் இல்லாததல்ல; இருப்பதுதான் என உணர்த்துகிறார்.


      காலத்தின் உத்தமர்- கருத்துகளில் புதுமை உரைக்கும் பூரணர் - கலீல் அவ்ன் நாயகர் மாயை பற்றி என்ன உரைக்கின்றார்கள்? இதோ பார்ப்போம். ஒரு பாடலில்...


எல்லாமே மாயம் அல்லாலே ஒன்றும்


இல்லைய தாலே நில்லாது போமே! எனப் பகர்வார்கள்.


வேறொரு பாடலில் ........ 


மாயத்துண் மறைந்தாலும் மதிகொண்ட தொன்று எனப் பாடுவார்கள்.


      மாயை பற்றி பல பாடல்களில்கூறும் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ஒரு பாடலில் ஓரிடத்தில் மாய விருந்து என மலர்வார்கள்.(இருந்தே இம் மாய விருந்தாம் உகத்தை)


 அதென்ன மாய விருந்து?


      விருந்து என்பதுவிரும்பி உண்ணும் விஷே­ உணவு!  மரியாதையாகஅழைத்து மனதுக்குப் பிடித்தமாகப் பரிமாறுவது!


      இங்கே எது விருந்து?  - யார்பரிமாறுவது!


      இந்த வாழ்க்கை விருந்தாம் - பரிமாறுபவன்d இறைவனாம்!


      ஆம்! - இந்த சுப்ராவில் (விருந்து விரிப்பு) ஆதம் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அமர்ந்து உண்டார்கள்.  அத்தனைநபிமார்களும், உலகில்தோன்றிய அத்தனை மனிதர்களும் உண்டார்கள். உண்கிறார்கள்.  உலக முடிவுவரைஉண்ணுவார்கள்.


      ஆஹா! என்ன அருமையான சொல்லாடல்! இந்த உலக வாழ்க்கை-  இதில் வாழும் நாம் - நம் தோற்றம்எல்லாமே ஒரு மாய விருந்து.  சலிக்காமல்-ஒதுக்காமல்.  இந்த விருந்தை தினமும்உண்ணுகிறோம்.  சுவைக்கிறது! பிடிக்கிறது.ஆனால் எண்ணிப் பார்த்தால் எல்லாமே மாயம். இது  இருப்பது போலத்தோன்றிஇல்லாதிருக்கும் ஓர் இதய விருந்து.


      உயிரில் ஊற்றுப் போல் பெருக்கும் உணர்வு வழியாக இந்த உலகைரசிக்கிறோம்.  சுவைக்கிறோம்.


      இந்த மாய விருந்தில் மயங்காத உயிர் உலகில் ஏதும் உண்டோ!


      உண்டு!


      இது மாய விருந்துதான் எனப் புரிந்து கொண்டவர்கள் விருந்திலும்கலந்து கொள்வார்கள்,விருந்து உபசரிக்கும் வீட்டுக்காரராகவும் மாறிப்போவார்கள்.  நீங்கள் எப்படி? விருந்துண்பவரா?வீட்டுக்காரரா?                                                 


(தொடரும்)