இதய தாகம்!
கவிஞானி G.S.T. மஹ்பூப் சுப்ஹானி
தங்கத் தமிழின் சொல்மலரால்
தாஹா நபிகளின் பொற்புகழைப்
பொங்கும் புனலாய் யானோத
பேரருள் பொழிவாய்ரஹ்மானே!
திங்கள் நிலவாம் எம் நபிகள்
திருவாம் புகழைத்தினமோத
மங்கா மதியில் நல்லொளியை
மிகுதியாய்த் தருவாய்ரஹ்மானே!
சங்கத் தமிழில் நாரெடுத்து
சத்தியர் புகழ்மணப்பூத்தொடுத்து
செங்கரும் பினிய சுவையிணைத்து
செப்பிட அருள்வாய்ரஹ்மானே!
கண்ணின் மணியுள் ஒளியாகி
கவினார் நன்னெறிஎமக்களித்த
புண்ணியப் பெருமான் திருப்புகழைப்
புகன்றிடச் செய்வாய்ரஹ்மானே!
மடமை உலகம் மதிபெறவே
மாண்பாய்தினந்தினம்செயலாற்றும்
கடமை நபிப்புகழ் தினம்பாட
கவினருள் நிறைப்பாய்ரஹ்மானே!
புண்கள் அடர்ந்த இதயங்களில்
புத்துணர் வான்நெறிமருத்துவத்தால்
கண்ணைத் திறந்த நபிப்புகழைக்
கல்பில் விரிப்பாய்ரஹ்மானே!
மக்கம் நற்பதி பிறந்திருந்து
மகத்துவ மதினா வாழ்ந்துவரும்
தக்கோர் போற்றும் நபிப்புகழைத்
தலையில் வைப்பாய்ரஹ்மானே!
ஏகன் இறைவா இணையில்லா
எங்கள் திருநபி பொருட்டாலே
வாகாய் எமக்கு அருள்மாரி
வார்த்தே காப்பாய்ரஹ்மானே!