அவர்கள் மட்டும்...
நிச்சயமாக நல்லோர்கள் சுவன இன்பத்தில் இருப்பார்கள். (30:83, 22.)
ஒவ்வொரு பொருளுக்கும் ஒர் அழகு இருக்கிறது.
ஆனால் அது தனியாகஇருப்பதைவிட கூட்டாக - கட்டமாக இருந்தால் அது ஒரு தனியழகு. ஒற்றைப் பனைமரத்தைவிட தோப்பாகநிற்கும் தென்னைக் கூட்டம் அழகோ அழகு.
ஆடு, மாடு, கால்நடைகள் அணியணியாகச்செல்வதை உற்று நோக்கினால் அதிலோர் அழகு மிளிர்வதாக அல்லாஹ் அருள்மறையில் அலர்கின்றான்.அந்திசாயும் நேரத்தில் பறவைகள் வரிசை வரிசையாகப் பறப்பது, இராணுவவீரர்கள் அணிவகுத்து நடந்து செல்வது, கஃபத்துல்லாஹ்வில் இஹ்ராம்அணிந்த ஹாஜிகள் இலட்சக்கணக்கில் வட்ட அணியாக - மலர்கள் விரிவதைப்போல, கூம்புவதைப்போல, வல்லவனை குனிந்து விழுந்து வணங்குவது.
இவையயல்லாம் பேரழகுசிந்தும் பெருமைமிகு காட்சிகள்.
இதேபோல, உலகில் வாழும் மனிதர்களை நாம் கூட்டம் கூட்டமாகப் பார்க்கிறோம். ஆனால், அதில்நல்லவர்களும் தீயவர்களும் சேர்ந்தே நம் கண்களுக்குக் காட்சி தருகின்றார்கள். மனிதர்களையும் புனிதர்களையும் பிரித்துப் பார்க்கமுடிவதில்லை.
நல்லவர்கள் மட்டும்- இறையடியார்கள் மட்டும் - அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் மட்டும் - பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத்திற்குள்ளானவர்கள் மட்டும் - உலகவாழ்வுத் தேர்வில் இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டும் -
இவர்களை ஒரிடத்தில்ஒட்டு மொத்தமாகப் பார்ப்பது எத்துணை அரிய ஆனந்தக் காட்சி! இந்தவாய்ப்பு இங்கு கிட்டுமா? கிடைக்காது! இந்தக் காட்சி சுவனத்தில்மட்டுமே கிடைக்கும்.
அங்கு சஹாபாக்களைஅணி அணியாகப் பார்க்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்வரை அனைத்து நபிமார்களையும்காணலாம்.
என்று காண்குவனே! என்று காண்குவனே! என ஏக்கம் கொண்டு புலவர்கள் பாடிய ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை ஆவல் மீர - ஆவல் தீர தரிசிக்கலாம்.
குலஃபாயே ரா´தீன்களை - குத்புமார்களை-இமாம்களை - வலிமார்களை - பாவம் படாத - கலப்படமற்ற தூயவர்களை -பரிசுத்த ஆத்மாக்களைஅந்தத் தூய உலகில் பார்க்கலாம்.
சுவனத்து இன்பங்களை விட உயர்ந்ததல்லவா அந்த சுகம்!
கழிவுகளை நீக்கி முதல் தரமானவைகளை ஓரிடத்தில்குவிப்பதுபோல அல்லாஹ் முதல்தர மனிதர்களை சுவனத்தில் ஒன்று சேர்த்து விடுகின்றான்.அங்கு அவர்களைப் பார்ப்பது அவர்களோடு நிரந்தர வாழ்வு வாழ்வது பெரும் பேறல்லவா?