கஃஅபத்துல்லாஹ்வை நோக்கித் தொழல்
(ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு)
இறையவன், கஅபத்துல் லாவென் றெய்திய
துறவுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ
மறையுரை வழங்கினன் என்ன மன்நபி
முறையிதென் றனந்தக் கடலின் மூழ்கினார்.
(சீறா-ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்)
கிப்லா என்னும் பதத்திற்கு முன்னோக்குமிடம்.. என்பது பொருள். மதச் சம்பிரதாயத்தில் தொழுகையில் முன்னோக்கும் இடத்தைக் குறிக்கும். முஸ்லிம்கள் இதுவரை எருசலேம் அதாவது பைத்துல் முகத்தஸ் பள்ளி இருக்கும் திசையை முன்னோக்கியே தங்கள் தொழுகையை நடத்தி வந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கஅபாவின் பக்கம் முன்னோக்கித் தொழும்படி ஆண்டவனுடைய கட்டளை பிறந்தது. உலகத்திலுள்ள ஒரு ஜாதியோ ஒரு மதமோ அல்லது ஒரு சமுதாயமோ அதன் தனிப்பட்ட வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்காகக் குறிப்பிட்ட பிரத்தியேகமான அடையாளம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் கிப்லாவை அந்த அடையாளமாகக் கொண்டுள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை தொழுகையே, அது தினம் ஐந்து முறை கஅபாவை முன்னோக்கி நிறைவேற்றப்பட வேண்டும். அத்தொழுகையைத் தனித்து நிறைவேற்றுவதைப் பார்க்கிலும் கூடிய வரையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவதே மேலானது.அவ்விதம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து தொழுவதில் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உள்ளமையானது ஒழிந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரே நிலை அல்லது ஐக்கியத்தில் இணைகிறார்கள். தொழுகையை நடத்த இமாம் ஒருவர் ஏற்படுத்தப்படுவார். அவரைப் பின்தொடர்ந்து தொழுபவர்கள் அவர் செய்யும் விதமே செய்வர். இவ்விதம் எல்லோரும் சேர்ந்து செய்கின்ற ஒரேவித வணக்கத்திற்கு அவர்களுடைய முன்னோக்கும்இடமும் ஒன்றாயிருக்க வேண்டியதவசியம். அந்த முன்னோக்கும் இடம் எந்தத் திசையுமிருக்கலாம். ஆனால் வணக்கத்தில் ஒற்றுமை ஏற்படுத்து வதற்காக ஒரு திசையைக் குறிப்பிட வேண்டியதவசியம்.
(தொடரும்)
விளக்கச் செய்தி
தொழுகையின் ஒரு தடவை தரையில் நின்றுபின் குனிந்து பின் இரண்டு தடவை தரையில் சிரசை வைத்து வணக்கம் செய்வதற்கு ரக்அத் என்று பெயர். பர்லு என்பது கட்டாயம் செய்ய வேண்டியது.