ஐந்து மனமே ஐந்து!
1. ஒழுக்கமுள்ள மனம் 2. தொகுக்கத் தெரிந்தமனம் 3. புதிதாக சிந்திக்கும் மனம் 4. மரியாதையுள்ளமனம் 5. நேர்மையான மனம்
1. ஒழுக்கமுள்ள மனம்
எந்த ஒரு விஷயத்தையும் சுமாராகச் செய்வதற்கு ஆயிரம் பேர் வருவார்கள். அதை மிகச் சரியாக, கச்சிதமாகச் செய்வதற்கு ஒழுக்கமுள்ள ஒருவரால்தான் முடியும். இங்கே நாம் ஒழுக்கம் என்று சொல்வது, அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற அக்கறை, அதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ளவும், தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் தயாராக இருப்பது. அரைகுறை வெற்றிகளில் திருப்தியடைந்துவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்வது.
2. தொகுக்கத்தெரிந்த மனம்
அதிவேகமாக முன்னேறும் உலகம் இது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள், டிவி,ரேடியோ, இன்டர்நெட் என்று விநாடிக்கு விநாடி செய்திகளும் புள்ளி விவரங்களும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாரும் இதைப்பற்றித் தொடர்ந்து ஏதாவது பேசியபடி இருக்கிறார்கள்.
இதைப்பார்த்துச் சிலர் குழப்பம் அடைவார்கள், ‘எத்தனை விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கறது?’ என்று மலைத்துப்போய் உட்கார்ந்து விடுவார்கள்.
வேறு சிலர், இந்தக் குழம்பிய குட்டைக்குள்ளும் மீன்பிடிக்கும் தெளிவு கொண்டவர்கள். ஆயிரம் புள்ளிவிவரங்கள் குவிந்தாலும், அவற்றைச் சல்லடை போட்டுத்தேடி தங்களுக்குள் தொகுத்து வெளியே எடுத்துவைத்து விடுவார்கள்.
3. புதிதாக சிந்திக்கும் மனம்
நாம் செய்கிற வேலை எதுவாக இருந்தாலும் சரி, அடுத்தடுத்த புதுமைகளுக்கு வாய்ப்பு உண்டு. நாளைய பிரச்சனைகளுக்கான பதில்கள் புதிதாக யோசிக்கிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுக்கு அல்ல.இதற்காக நாம் பெரிதாக மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை. மனித மூளை என்பது வற்றாத ஜீவ நதி. அதிலிருந்து புதுப்புது ஐடியாக்கள் கொட்டிக்கொண்டே இருக்கும்.
4. மரியாதையுள்ளமனம்
உதாரணமாக, உங்கள் அலுவலகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிலர் இருக்கலாம், உங்கள் தெரு முனையில் ஒரு சீக்கியர் கடை வைத்திருக்கலாம், இதுமாதிரி ‘அந்நியர்’களோடு உங்களால் எந்த அளவு ஒன்றமுடியும்? முதலில்,
அவர்களை அந்நியர்களாக நினைப்பதே தவறு. மேலோட்டமான வித்தியாசங்களை மறந்துவிட்டு எல்லாவகை மனிதர்கள்மீதும் மரியாதை செலுத்துகிற மனம் வேண்டும்.
5. நேர்மையான மனம்
மனிதனின் வெற்றிக்கு அவசியமாக ஐந்து ‘மனசு’களில் இந்த நேர்மைதான் மிக முக்கியமானது என்கிறார் ஹாவர்ட் கார்ட்னார். பொய்யும் புரட்டும் தாற்காலிக சந்தோங்களைத் தரலாம், ஆனால் அதன் தாக்கம் கொஞ்ச நாள் தான் நீடிக்கும். தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, நேர்மையான மனசு கொண்டவர்கள்தான் அதிகம் மதிக்கப்படுவார்கள், அவர்களுக்குத்தான் நல்ல வாய்ப்புகளும், நிச்சயமான வெற்றியும், அதைவிட முக்கியமாக நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
தகவல் : பு.னி.மூ ஸாதிக்
இஸ்லாமும் மனிதனும்
‘மனிதனே படைப்பின் மகத்துவ உச்சம்’ என்பது கவிதையில் தோய்ந்த காவிய மொழி ஆகும். இருப்பினும், சமயங்களைப் பொறுத்தவரை இஸ்லாம் ஒன்றிலே தான் இந்தக் கருத்தின் கனபரிமாணம் அதிகமான அளவில் ஆழப் பதிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
இஸ்லாத்தின் வெளிப்பாட்டிற்கு முன்னர் மதங்கள் மனிதனை நம்பிக்கை இழந்த குள்ளநரன் என்பதாக ஆக்கிப்போட்டன.
எகிப்திய மதம் உணர்ச்சி வயப்பட்ட கடவுள்கள் உருட்டி விளையாடுகிற கைவினைப் பொருள் என ஆக்கிவைத்தது.
கிரேக்க, உரோமானிய மதங்கள், புராணங்கள் போர்வைகளில் மனிதனைப் புதைத்து, பாதுகாப்பின்மை என்கிற பயங்கரவாதத் தொட்டிலில் அவனைப் பிள்ளையாக்கித் தாலாட்டின.
கிழக்கத்திய மதங்களோ மனிதனின் தலைக்கு மேல் தாவின : விதி என்கிற நீர்ச்சுழியில் விடப்பட்ட நிலையில்லாத உலர்ந்த இலைபோல மனிதனை அவை மாற்றின.
கிறிஸ்தவ மதத்தின் இருட்டுப் பகுதி, தன் பங்கிற்கு அவனைத் தத்துவச் சங்கிலிகளால் கட்டி, ஆதிப் பெற்றோரான ஆதாம்,ஏவாளின் பாவங்களில் மனிதனுக்குப் பங்கு உண்டு என்று அறிவித்து மனிதனை அவனது ஆண்மைச் சிகரத்திலிருந்து குப்புறத் தள்ளியது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனின் திருத்தூதராக உருக்கொண்டபோது தனது இயற்கையான, உன்னத நிலையை, அதுவரை அறியாதிருந்த மனிதனைத் தோல்விப் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டு மனிதனை மனிதனின் வசம் ஒப்புவித்தார்.
இஸ்லாம் வெளிப்பட்டபோது மனிதன் ஒவ்வொருவனும் அவனே அவனது தலைவன் ஆனான்.
- வலம்புரிஜான்-