சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்
2012 இந்திய விஜயம்
எஸ்.எச்.எம்
விவசாயிகள் வான்மழைக்குக் காத்திருப்பது போல முரீதுகள் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகைக்காக எப்போது? எப்போது?என ஆண்டுதோறும் காத்திருப்பார்கள்.
அந்த அருள் வருகை திருச்சியில் நிகழ்ந்தது. அதற்கு முன்னர் தங்கள் சொந்தப் பணிகளுக்காக தமிழக விஜயம் செய்து ஒரு மாதம் தங்கி இலங்கை திரும்பியிருந்த செய்கு நாயகம் அவர்கள் மீண்டும் வருகை புரிந்தார்கள்.
11.06.12 அன்று மதரஸதுல் ஹஸனைன் பீஃ ஜாமிஆ யாசீன் அறபுக் கல்லூரியில் பொது சந்திப்பு நிகழ்ந்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்த முரீதுகள் சந்தித்து பேருவகை பெற்றார்கள். அங்கு வாப்பா நாயகம் அவர்கள் அருளுரை யொன்று வழங்கினார்கள்.
பின்னர் திண்டுக்கல் விஜயம் நடைபெற்றது. தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் இல்லத்தில் திண்டுக்கல் மஜ்லிஸ் நடைபெற்றது. ஆர்வமாகக் கூடிய முரீதுகள் மத்தியில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஆன்மிக உபதேசங்கள் புத்துணர்வை ஏற்படுத்தின. தினமும்ஆனந்தப் பெருவிழாவாக இருந்தது.
இந்த முறை மிஃராஜ் இரவு திண்டுக்கல்லில் நிகழ்ந்தது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தலைமையில் குர்ஆன் ஷ ரீபில் சூராஇஸ்ராவிலிருந்து ஒரு அய்ன் ஓதப்பட்டு, பர்ஸன்ஜிய் மவ்லிதில் மிஃராஜை விளக்கும் பகுதி அறபியிலும் தமிழிலும் வாசிக்கப்பட்ட பின்னர் “அஸ்ஸுபுஹுபதா” பைத்தும், நாயகர் பன்னிரு பாடலில் “வென்ற விண் சென்றாரன்றே”பகுதியும் “பத்ரு மெளலிதி”லிருந்து பல பைத்துகளும் தமிழ்ப்பாக்களோடு பாடிஓதப்பட்டன. சங்கைமிகு செய்கு நாயகம்அவர்களின் மிஃராஜ் துஆ ஓதப்பபட்டது. திண்டுக்கல் முரீதுகளும் அருகே மதுரைபோன்ற ஊர்களிலிருந்து வந்திருந்த முரீதுகளும் பாக்கியப் பரவசம் பெற்றார்கள்.
28.6.12திருச்சி தியாகி கலீபா எம். சிராஜுதீன் அவர்கள் இல்லத்தில் ஜம்இய்யத்துல் உலமா கூட்டம் வாப்பா நாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் தஞ்சை, வழுத்தூர், திருப்பந்துருத்தி, விஜயத்தை நிறைவு செய்து மதுக்கூரில் நடைபெற்ற சேக்தாவூது இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்ட சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள், ஆழியூர்காரைக்கால் பிரயாணத்தை முடித்து திருமுல்லைவாசல் வந்து சேர்ந்தார்கள். இருசன்னிதானங்கள் சங்கமித்த திருமுல்லையில் பராஅத் இரவு கிடைத்தது. வெளியூர் முரீதுகள் பலரும் கலந்து கொண்டு பிறை14 ராதிபிலும் - பராஅத் இரவு பாக்கியத்திலும் கலந்து கொண்டு அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். பின்னர் பாக்கம் கோட்டூர், கிளியனூர்,எலந்தங்குடி, கடலூர், பரங்கிப்பேட்டை,நெய்வேலி பிரயாணத்தை நிறைவுசெய்து சென்னை வந்து கலீபா அ. அப்துற்றவூப் BABL அவர்கள் இல்லத்தில் தங்கினார்கள்.
தினமும் மஜ்லிஸ் சிறப்பாக நடந்தது. தங்களின் 2012 விஜயத்தில் முதல் பகுதியை நிறைவு செய்து நாங்கள் இன்ஷா அல்லாஹ் மீண்டும் ரமளானுக்குப் பின் வருவோம் என்ற மகிழ்வுச் செய்தியைக் கூறி 18.07.2012 மதியம் 4.00 மணிக்கு இலங்கை புறப்பட்டுச் சென்றார்கள். அழைத்துச் செல்ல வந்த திண்டுக்கல் அப்பாஸ் ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களோடு புறப்பட்ட சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகை முரீதுகளின் வாழ்வில் பெரும் பேறையும் -பாக்கியத்தையும் அறிவுக் கருவூலத்தையும் அள்ளித்தருவதாக அமைந்திருந்தது.