• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  அல்லாஹ்வினும் பெரியவன் எவனுமில்லை..


அல்லாஹ்வினும் பெரியவன் எவனுமில்லை...

பழ. கருப்பையா.எம்.எல்.ஏ



அண்மையில் மீலாதுநபி விழா வந்து சென்றது.  உலகத்தின் பாதி மீதுதன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக  ஆட்சி செலுத்தும்நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.

உலகத்தில் பல நபிகள்தோன்றினார்கள்; மோஸசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள்என்று ஏற்கிறது திருக்குரான்.  ஆனால்,முஹம்மது நபிதான் இறுதி நபி!

முஹம்மது நபி ‘ஸல்லல்லாஹுஅலைஹி வசல்லம் என்று போற்றப்படுபவர்.

நபிகள் நாயகம் அரபுமண்ணை மட்டுமின்றி, அனைத்துலகத்தையும்மனதில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார்.  அதை ‘தீன்’ என்று இசுலாம் சொல்கிறது.

அந்த ‘தீனில்’ ஈடுபாடுகொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை.  அந்தக்கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில்நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன.  அதை ‘உம்மா’ என்பார் நபிகள் நாயகம்.

வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும்வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை.  இவைஅத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார்.  இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.

நபிகள் பெருமானார்கட்டியமைத்த ‘உம்மா’ தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை.  உம்மா என்பது சமூகம் தான்.

இசுலாம் முதலில்இறை மீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்து கிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையைவலியுறுத்துகிறது.

ஐந்து வேளையும்தொழுவதற்கு ‘பாங்கு’ சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு.  இன்னின்ன நேரங்களில் தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்றகாரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக்கூடியதாக இருக்கிறது.

இமாம் தொழுகையைவழிநடத்தும் போது, எப்போது குனிவது,எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது,எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.

இசுலாமியர்கள் கடற்கரையில்பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்றதிகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக் கூடத்துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பது தான்!

ஆயிரத்து நானூறுஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார்.

இசுலாத்தின் அடிப்படைஇறைவனுக்கு வடிவமில்லை என்பது.  இறைவனுக்குவடிவம் தேவைப் படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும்.  வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள் தாமே இருக்கின்றன!மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒருகுறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?

ஓடுகின்ற தொடர்வண்டியிலும்,போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும்தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது.  எனினும்,பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாகஇருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் ‘உம்மா’ என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்!

பள்ளிவாசல் தொழுகைபோல், ‘ஹஜ் யாத்திரையும்’ ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகஅமைக்கப் பட்டிருக்கிறது. வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொருஇசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுதுவர வேண்டும்.

பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில்கூடித் தொழும்போது ஓர் ‘உம்மா’ உருவாவது போல, பக்கத்து நாட்டுக்காரனோடும்,தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கஅபாவுக்குமுன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய ‘உம்மா’ உருவாகாதா?


ஒரே இறை அல்லா
; இறுதி நபி முஹம்மது நபி; அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத்தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின்ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும்ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.      கீழக்கரையில்கட்டப்படும் சிறிய அளவினதான ‘உம்மா’ மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!

நாட்டின் எல்லைக்கோடுகள்தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப்போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!

இராக்கிலுள்ள இசுமாயிலும்
, செளதி அரேபியாவிலுள்ள செளக்கத் அலியும்,ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர் பாட்சாராவுத்தரும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என விண்ணதிர முழங்குகின்றபோது,உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்!

திருக்குரானின்வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்றுநபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார்.

இஸ்லாம் எல்லா நாடுகளிலும்ஊடுருவி வேரூன்றியதுண்டு.  அங்கெல்லாம் மார்க்கம்தன்னைத் திருத்திக் கொண்டதில்லை.மண்தான் மார்க்கத்துக்கேற்றவாறுதன்னைத் திருத்திக் கொண்டிருக்கிறது.

இசுலாமியர்களின்கொள்வினை - கொடுப்பினைகள், திருமண உறவுகள்,அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், திருமணமுறிவுகள், அவற்றுக்கான முறைகள் ஆகிய அனைத்துமே அவர்களின் ­ரீயத் சட்டத்தில் துல்லியமாகவகுக்கப் பட்டிருக்கின்றன.

பாங்கு சொல்லி அழைக்கும் முறையில் கூட ஆயிரத்தி நானூறு ஆண்டுகளாக எந்தமாற்றமுமில்லை. இசுலாம் அவ்வளவு கட்டிறுக்கமானது. இவற்றையயல்லாம் கவனிக்காமல்அவர்களுடைய ‘­ஷரியத் சட்டத்தை’ ஒதுக்கிவிட்டு, ஒரே மாதிரியானசிவில் சட்டத்தை ஏற்க வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்?


உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஷாபானு என்னும் முஸ்லிம்பெண்ணின் திருமண முறிவு வழக்குத் தீர்ப்பில் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான உரிமையியல்சட்டத்துக்குப் பரிந்துரை செய்தார்.  ஆனால்ராஜீவ் காந்தி காலத்தில் 1986 -ல் நாடாளுமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்துவிட்டது!

‘மஹர்’ என்னும் முறையை விடுத்து, இந்துத் திருமண முறிவுக்குப்போல்,சீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றம்முற்றுப்புள்ளி வைத்தது. இந்துப் பெண்ணின் திருமண முறிவு உரிமை விடுதலை பெற்ற இந்தியாவில்நேரு காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது. ஆனால், திருமண நாளிலேயேபின்னொருநாள் திருமண முறிவு நேரிட்டால், அதற்கான வழிவகை என்னஎன்று சிந்தித்தவர் நபிகள் நாயகம்! முறிவு செய்யப்பட்ட பெண்ணுக்கு ‘மகர்ப்பணம்’ வழங்கவேண்டும் என்பது நபிகள் கண்ட தீர்வு, அந்த ‘மகர்’ திருமணப் பொழுதிலேயேமுடிவு செய்யப்படுவது இசுலாத்தின் தனித்தன்மை! திருமணம் என்பதை ஆண் பெண்ணுக்கிடையேயானஓர் ஒப்பந்தம்   என்ற அளவிலேயே இசுலாம் பார்க்கிறது.

முறிவு செய்த ஆண் ‘மஹர்’ வழங்காவிட்டால் குற்றமே ஒழிய முறிவு குற்றம்கிடையாது! ஒவ்வொரு மக்கள் கூட்டமும் ஒவ்வொரு வகையான ஒழுகலாறுகளைக்கடைப்பிடிக்கிறது.இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஒழுகலாறுகள்
, விதி முறைகள்,சட்டங்கள் ஆகிய அனைத்தும் அல்லாவினால் சொல்லப்பட்டு நபிகளின் வாயிலாகஇறங்கியவை. அவற்றில் திருத்தம் செய்பவன் அல்லாவை விடப் பெரியவனாக இருக்க வேண்டும்.  அல்லாவினும் அந்தப் பெரியவன் எவனுமில்லை.  ஆகவேதான் அந்த அமைப்பு எந்த விலகலையும் அனுமதிப்பதில்லை.  ஒரு வாழ்க்கைமுறைஅல்லது ஒழுகலாறு நாடு கடந்து இனங்கடந்து, மொழிகடந்து சென்றுஉலகெங்கணும் ஆங்காங்கே வேரூன்றிய போதும், வேரூன்றிய இடங்களின்போக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாதபடி, நபிகள்பெருமானார் ஓர் உலகளாவிய ‘உம்மா’வைக் கட்டியமைத்ததில்  அவருடைய சிந்தனைப் பாடுகள் மட்டும் புலப்படவில்லை.   அதில் நபிகள் நாயகத்தின் ஈடு இணையற்ற மேதைமையும்ஒளிர்கின்றது!“லாஇலாஹ இல்லல்லாஹ்முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்”

 

நன்றி : தினமணி 22.2.12. தகவல்: ஆஷிகுல் கலீல்,B.Com., திருச்சி