திருமறைப் பக்கம்
மிஉராஜ் தத்துவம்
அதிலிருந்து அவர்தம்) பார்வை மழுங்கவில்லை, இன்னும்அது மட்டைக் கடக்கவுமில்லை.(27:17)
அருமை நாயகம் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஉராஜ்இரவில் இறைவனைத் தரிசிக்கச் சென்றார்கள். அதுபற்றி இறைவன் தன் அருள்மறையில் “பார்வை மழுங்கவில்லை, இன்னும் அது மட்டைக் கடக்கவுமில்லை” என விபரிக்கின்றான். இந்த வசனத்தின் மறைபொருளை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் “ரிஸாலா கெளதிய்யாவில்” இவ்வாறு விளக்குகினறார்கள்.
அல்லாஹுத ஆலா சொன்னான். மிஉராஜானது நானல்லாத சர்வ வஸ்துக்களையும் விட்டு அகன்று விடுதலாகும். மிஉராஜின் பூரணமானது “பார்வை மழுங்கவில்லை, இன்னம் அதுமட்டைக் கடக்கவுமில்லை” என்ற குர்ஆனிய திருவாக்கியத்தின் கருத்தாகும்.
விளக்கம் : மிஉராஜ் என்பது இறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது.இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்தி அவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே; அதற்கும்எனக்கும் எந்தப் பிரிவுமில்லை; நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ் எனும் உயர்ச்சியாகும்.
இந்த மிஉராஜின் முழுமை இறைவனை முழுமையாய் பார்வை மழுங்காமற் காண்டலாகும். பார்வை மழுங்கலென்பது இறைவனைப் பிரிவு பிரிவாய் சிறிது சிறிதாய் எண்ணி நானும் நீயும் வேறு எனும் நிலையில் எண்ணத்தைச் சின்னபின்னப்படுத்தி ஒரு பொருளைக் கூறுபடுத்துவது போல் இறைவனைக் கூறுபடுத்திச்சித்திரவதை செய்யும் நிலையாகும். இந்த உயர்ச்சியின்நிலை மட்டையும் கடக்காது அனைத்தும் நானே எனும் மன்ஸூருல் ஹல்லாஜ் (ரலி) அவர்களின் உன்னதநிலையை அடைவதாகும்.
அனைத்தும் நானே; நானே ஹக்கு. எனும் நிலையே மட்டைக் கடக்காத உண்மை நிலையாகும். நானே இறைவன் என்று மமதையுடன் பிர்அவ்ன் கூறி வந்த நிலைமையே மட்டைக் கடந்த நிலையாகும். எனவே இதில் இரண்டு நிலையுண்டும்.
ஒரு நிலை, ஹக்கையே அறியாது மமதைகொண்டு தானே இறைவன் என்றுகூறிக் கொண்டது. இரண்டாவது நிலை. அனைத்தும் நானே என்று இறைவனை அறிந்து பூரணமாய் இரண்டறக்கலந்து மாறா இன்பமடையும் நிலை. அறியாத மூடர்கள், இறைவனைக் கூறுபோட்டு இறை தண்டனையை அடையும் நிலையையும் இறையின்பத்தை அடையும்நிலையையும் இரண்டாகக் கலந்து காண்பதோடு உண்மைக்கு மாறாகவும் பேசித்திரிவது பித்துப்பிடித்த மந்த நிலையாகும்.