உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன்மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
சற்றுயர் மேடுதன்னிற்
றானையின்றலைவ ரான
மற்றிகழ்ஸுபியா னென்பார்
மற்றவரோடு நின்று
ஒற்கமிலாத ஹுபல்
உயர்கவென்றேத்தி னாரே
புற்கதிலாத அல்லாஹ்
பூரணனுயர்ந்தா னென்றே.
கொண்டுகூட்டு :
சற்று உயர்மேடு தன்னில் தானையின் தலைவரான மற்று இகழ் ஸுப்யான் என்பார் மற்றவரோடு நின்றுஒற்கம் இல்லாத ஹுபல் உயர்க என்றுஏத்தினார். புற்கு அது இல்லாத அல்லாஹ் பூரணன் உயர்ந்தான் என்று (முஸ்லிம்கள்கூறினர்)
பொருள் :
படைத்தலைவரானபலரும் இகழ்கின்ற ஸுபியான் என்பார் சற்றே உயர்ந்த மேட்டில் மற்றவர்களோடு நின்று ஹுபல் உயர்கவென்று வாழ்த்தினார். சிறுமையற்ற அல்லாஹ் பூரணன். உயந்தான் என்று (முஸ்லிம்கள் பதிலாகக் கூறினார்கள்).
குறிப்பு :
தானை : படை, மற்று : அசைநிலை. ஒற்கம் : வெட்கம், அடக்கம். ஹுபல் : எதிரிகளின் கடவுள். ஏத்தல் : புகழ்தல்.புற்கு : சிறுமை, குறைவு.