தமிழகத்து வலிமார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
(கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. திருச்சி)
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சாஹிப் அவர்களுக்கு இலங்கை இரண்டாவது தாயகம்போல் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் இலங்கைக்குச் சென்றபோது,
கொழும்பு ஆலிம் சாஹிபு என்று புகழ் பெற்று விளங்கிய செய்யிது முஹம்மது அவர்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மீது மனாக்கி புன்னுபூஸ் பீ F மனாகிபில் ஆலிமுல் அரூஸ்”என்ற பாமாலையைப் பாடி அவர்களை வரவேற்றார்கள்.
கொழும்பு ஆலிம் சாஹிபு என்பவர்கள் இந்தியா வந்து மார்க்கப் பணிசெய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் நிறுவிய தர்பியத்துல் அத்பால் என்னும் தர்ம ஸ்தாபனம் இன்று வரை சென்னை அங்கப்பநாயக்கன் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தில் தான் எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது செய்குநாயகம் அவர்களின் கலீபா, காதிர் முஹம்மது ஆலிம் அவர்கள் தமது கடைசிக் காலம் வரை ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியது ஆகும். கொழும்பு ஆலிம் சாஹிபு என்ற செய்யது முஹம்மது ஆலிம் அவர்கள் திண்டுக்கல் அருகேயுள்ள கோவிலூர் என்னும் ஊரில் நல்லடக்கஞ் செய்யப்பட்டுள்ளார்கள். இப்படி இலங்கையிலுள்ளவர்கள் பலரது ஒத்துழைப்புடன் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் மார்க்கக் கல்வியை போதிப் பதற்காக அரூஸியத்துல் காதிரிய்யா ஸ்தாபனத்தின் கிளைகள் நிறுவப்பட்டன. ஏராளமான பள்ளிவாயில்களும் கட்டப் பட்டன. ஒவ்வொரு பள்ளி கட்டத் தொடங்கும்பொழுதும் அதன் நிர்மாணச் செலவுக்கு ஒரு தொகையை அடையாளப் பங்காக அளிப்பது அவர்களின் நீங்காத வழக்கமாக இருந்தது. தாங்கள் நிர்மாணித்த பள்ளிவாயில் அனைத்திற்குமே அவை கட்டப்பட்ட ஆண்டின் எண் அப்ஜத் கணக்கில் வரும்படி அரபியில் கவிதையும் எழுதிக் கொடுத்தார்கள்.
இன்று இலங்கையின் பெரிய பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் மருதானைப் பள்ளிவாயிலுக்கும் கடைக்காலிட்ட பெருமை அவர்களையே சாரும். பள்ளிவாயில்கள் மட்டுமின்றி தைக்காக்களும் மதரஸாக்களும் அவர்களால் ஏராளமாக நிறுவப்பட்டன. ஹிஜ்ரி 1299 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் பழைய சோனகர் தெருவில் கட்டப்பட்ட “மக்னமுஸ் ஸஆதா” என்னும் தைக்கா பள்ளி இலங்கை அரூஸியத்துல் காதிரிய்யாவின் தலைமைப் பீடமாக இன்றும் விளங்கி வருகிறது. இது தொழும் பள்ளியாகவும் ராத்திபு செய்யும் இடமாகவும் பயன்படுத்தப் படுகிறது.
இலங்கையில் மாத்தறையில் அவர்கள் தைக்கா கட்ட எண்ணிய போது அதற்குப் பொருத்தமான இடம் தாசிம் லெப்பை மரைக்காயர் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவரோ கடின சித்தம் கொண்ட கோபக்காரராக இருந்ததால் அவரிடம் சென்று அந்த இடத்தைக் கேட்க அனைவரும் தயங்கினார்கள். இப்படிப்பட்ட சூழ்லையில் அந்த தாசிம் லெப்பைக்கு ஒரு வழக்கு நீதி மன்றத்தில் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. அதில் வெற்றிகிட்ட வேண்டும் என்பதற்காக தாசிம் லெப்பையை அவரது மருமகர், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் அழைத்து வந்தார். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்களுக்கு அவரது நிலம் தேவைப் படுவதையும் அதைத் தரவேண்டும் எனவும், தங்கள் வழக்கு வெற்றிபெற இறையிடம் இறைஞ்சுவதாகவும் கூறினார்கள். உடனே தாசிம் லெப்பை சம்மதித்து விட்டார். அதன்படி இடமும் வழங்கப்பட்டது. அவரது வழக்கிலும் அவருக்கு வெற்றியே கிட்டியது.
இவ்வாறு அவர்களின் முயற்சியில் இலங்கையில் மட்டும் 365 பள்ளிவாசல்களும் தைக்காக்களும் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பல பகுதிகளில் சுமார் 100 பள்ளிவாசல்களும் தைக்காக்களும் கட்டப்பட்டன.அவர்களின் மார்க்கப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட கொழும்பு நகரின் நிர்வாக அதிகாரியான லாமசூர் என்ற ஆங்கிலேயர் இஸ்லாத்தைத் தழுவினார்.
(தொடரும்)