• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  இறைவன் நாடினால்....


மருத்துவம்

இறைவன் நாடினால்....

தகவல் திருச்சி M.M.S 

இங்கிலாந்தில் கோமா நிலையிலிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து மருத்துவ உலகை திகைக்கச் செய்துள்ளது.  அது மட்டுமல்ல பிரசவத்திற்குப் பின் கோமா நிலையிலிருந்த பெண்ணும் சுயநினைவு பெற்றுவிட்டாள்.

லண்டன் நகரில் வசிப்பவர் லிசாபோலேண்ட்.  வயது 31.  பன்றிக் காய்ச்சலில் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  கர்ப்பிணியாக இருந்த நிலையில் காய்ச்சல் அதிகமாக கோமா நிலைக்குச் சென்று விட்டார்.  செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் இரண்டு மாதங்களுக்குமேல் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த  நிலையில், உணர்வு ஏதும் இல்லாமல் கோமா நிலையிலேயே லிசா பிரசவத்திற்கு தயாராகியிருப்பதும் குழந்தையின் தலைமட்டும் வரவிருப்ப தையும்  லிசாவை கவனித்து வந்த நர்ஸ் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார்.  அவர்கள் குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்து விட்டார்கள்.  குழந்தை பிறந்து சிலநாட்களில் அந்தப் பெண்ணுக்கும் நினைவு திரும்பிவிட்டது. கோமாவிலிருந்து விழித்த பெண் கூறுகையில்,கோமாவிலிருந்த எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஆனால் பயப்படவில்லை.  குழந்தை எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ளத் துடித்தேன்.  அவன் நல்லபடி இருக்கிறான்.  

 

“என் மகன் என்னைக் காப்பாற்றி விட்டான்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார். மருத்துவர்களும், நர்ஸ் மார்களும் பொறுப்புடனும் கடமை யுணர்ச்சியுடனும் கவனித்து வந்ததால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இதே போல நம்நாட்டில் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள டாக்டர் சீத்தாராமன் னிம் கூறுகையில், 

நான் பணியிலிருந்த சமயம் எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மேலாக நானே விரும்பி ‘அவசர சிகிச்சைப் பிரிவு’ பகுதியை கவனித்துக் கொள்வதாகக் கேட்டு வாங்கினேன்.  அந்த மருத்துவ மனையிலிருந்த பொறுப்புள்ள நர்ஸ்மார்களை என் பிரிவுக்கு மாற்றிக் கேட்டேன்.  அந்த அவசரப் பிரிவில் கோமாவிலிருந்த நோயாளி ஒருவரும் இருந்தார்.  பலநாட்கள் ஆகியும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.  சகமருத்துவர்கள் ஏன் அந்த கோமா நோயாளியை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறாய். டிஸ்சார்ஜ் செய்து விட வேண்டியதுதானே? என்றார்கள்.  அரசு தரும் பணத்தில் அவருக்கு வைத்தியம் செய்து வருகிறோம் இன்னும் கொஞ்சம் வைத்துப் பார்ப்போமே என்று சொல்லி விட்டேன்.  என்ன ஆச்சரியம்? சரியாக 29 ஆம் நாள், அந்த நோயாளி கண்விழித்து சுய நினைவு பெற்று விட்டார்.  பாவம் அவரை முன்பே டிஸ்சார்ஜ் செய்திருந்தால் அவர் இறந்து போய் பல நாட்கள் ஆகியிருக்கும்” என்றார்.   இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரியட்டும்!