(புதிய தொடர்)
ஸஹாபாப் பெண்மணிகள்
அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள்
பிறப்பு
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார். இவரது தந்தை குவைலித் பின் அஸத்; தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா இவருக்கு இரு சகோதரிகள். அவர்கள் ஹாலா பின்த் குவைலித், ருகையா பின்த் குவைலித் ஆகியோராவார். கதீஜா (ரலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர்.பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் தாஹிரா பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அல்-அமீன் அஸ்ஸாதிக்
அந்தக் கால கட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அம்மக்கள் அல்-அமீன்-நம்பிக்கையாளர் என்றும் அஸ்ஸாதிக் உண்மையாளர் என்றும் அழைத்தனர்.
வியாபாரத்தில் நேர்மை நாணயம்
நபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள். கதீஜா (ரலி) அவர்கள் அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால் தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்குஅழியாத முன்மாதிரியை வழங்கினார்கள். ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (ரலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண்கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டு விடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்ற பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு. இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை, நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரார் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள்.இதனால் கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது கதீஜா (ரலி) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா,ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
மூன்று பேரும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர்,தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண்குழந்தையைத் தவிர கதீஜா(ரலி)அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணம்
கதீஜா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும்,அவருக்குப் அதீக்பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாக வாழ்ந்து வந்தனர்.
அன்னை கதீஜா (ரலி)அவர்கள் மிகப்பெரிய செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்தார்கள். மக்கா மாநகரிலிருந்து சிரியா போன்ற வெளிநாடு சுமைகளை விட கதீஜா (ரலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு வாணிபம் செய்து அரபுலகம் போற்றும் சிறந்த தொழிலதிபராகவும், வணிக மேதையாகவும் திகழ்ந்தார்கள். நபியவர்கள் வியாபாரத்தில் மட்டுமின்றி, அனைத்துதுறைகளிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதால் மக்கள் அவர் மீது உயிரையே வைத்திருந்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன. அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (ரலி) அவர்கள். இதனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயதோ இருபத்தைந்தாக இருந்தது.
பிள்ளைகள்
நபியவர்களைத் திருமணம்முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூஹாலா மூலமாக ஹிந்த்,ஹாலா ஆகிய பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த் என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார். அபூஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிள்ளைகள் பற்றி காஸிம், அப்துல்லாஹ்(தாஹிர், தையிப்)ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்துவிட்டனர். ஏனையோர் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர்.
இவர்களில் ருகையா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள். எனினும் பாத்திமா (ரலி) அவர்கள் மாத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்
கதீஜா (ரலி) அவர்களின் வயது 55ஆகவும், நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் வயது இருந்த வேளை அது. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சீர்கெட்டு, வழிதவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சமுதாயத்தைச் சீர் செய்வதெப்படி, அவர்களை ஒளியின் பால் இட்டுச் செல்வதெப்படி என்றெல்லாம் பலவாறு சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அவ்வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக் கொடுத்தது. எனவே, இறைவனை வணங்கி வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா (ரலி) அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள். குகை, ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது.
இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராக் குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முன் தோன்றி இக்ரஃ (ஓதுவீராக ! ) என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனக்கு ஓதத் தெரியாது
என்றனர். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கட்டித் தழுவிவிட்டு 96ஆம் அத்தியாயமாகிய “அல் -அலக்” கின் இக்ரஃ எனத்துவங்கும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள்.
இந்நிகழ்வால்அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து
எம்மைப் போர்த்துவீர்....எம்மைப் போர்த்துவீர்....... என்றருளினார்கள் !
(அடுத்து)