முஸ்லிம்களில் - அமெரிக்கர்கள்
அமெரிக்கா மீண்டும் ஒரு முறைதன் கீழ் புத்தியைக் காட்டிவிட்டது. முஸ்லிம்களைச் சீண்டுவதும் அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதும் அதன் வழமையான சேட்டைதான் !
முஸ்லிம்கள் யாரும் யூதர் - கிருஸ்தவர்கள் உயிராக மதிக்கும் ஏசுவைப் பற்றியோ - மோஸேயைப் பற்றியோ எந்தக் காலத்திலும் ஒரு சிறு துளிகூட தவறாகப் பேசியதில்லை. ஏனென்றால் அவர்களைத் தரம் தாழ்த்தினால் தங்களின் ஈமானின் தரம் வீழ்ந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
மாறாக, ஈஸா அலைஹிஸ்ஸலாம் எனவும் மூஸா அலைஹிஸ்ஸலாம் (அவர்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக) எனவும் மரியாதையாக அவர்களின் பெயர்களைப் பிரயோகிக்கின்றனர்.
ஆனால் ஏனோ இந்த அமெரிக்க யூத கிருத்துவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதிக்காமலிருப்பதோடுஅவர்களை அவமரியாதை செய்வதிலும் அற்ப மகிழ்ச்சியடைகின்றனர். சூரியனைப் பார்த்துக் குரைக்கும் வரட்டு நாயாகத் தான் அவர்கள் எப்போதும் இருக்க விரும்புகின்றனர்.
முஸ்லிம் உலகம் கொதித்துக் குமுறி நிற்கிறது. ஆனால் தொடர்ந்து நடக்கும் இந்த நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வழிதான் புரியவில்லை.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் வீட்டில் பிறந்து முஸ்லிமாகக் காட்சி தந்து கொண்டிருக்கும் சிலர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக் குறைவாக எழுதுவதையும் பேசுவதையும் சமுதாயம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ என்ற கேள்வி நெஞ்சில் எழுகிறது.
அமெரிக்கர்கள் எதிரே நிற்கும் எதிரிகள். ஆனால் இவர்களோ உள்ளிருந்து உள்ளத்தைக் கெடுக்கும் புல்லுருவிகள். பெருமானாரின் இந்தப் பகைவர்களை சமுதாயம் எப்போது அடையாளம் கண்டுகொள்ளப் போகிறதோ தெரியவில்லை!