ஜமாலிய்யா தோட்டத்தில்
தரீக்காக்களின்தாற்பரியம்
தரீகாக்கள் ஒற்றுமையை வளர்ப்பதற்காகவே உண்டாயின .ஒற்றுமையென்னும்போது அங்கு யாவற்றிலும் ஏகத்துவத்தைக் காண்பதாகும் .ஏகத்துவத்தைக் காணுமிடத்தில் பிரிவினை இராது .பிரிவினை உண்டாகும்போது தரீக்காவின் தாற்பரியத்தை அடைதல் இயலாது போகும் .எனவே தரீக்காக்கள் நோக்கமிழந்து சங்கங்களாக மாறி அவற்றின் புனிதத்தன்மையும் நீங்கிவிடுகின்றது .
இன்று மக்கள் தரீக்காக்களில் இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு தொண்டை கிழிய ஊர் கேட்கப் பெருஞ்சப்தமிட்டும் இராகம் பாடியும் வெள்ளி ,திங்கள் இரவுகளில் கூட்டங்கூட்டமாக இருந்து ராத்திபு செய்கிறார்கள் .ஆனால் அதன் தாற்பரியத்தை அவர்கள் அறியவில்லை .இதை மட்டும் தவறாமல் எடுத்து நடாத்துவது கொண்டு தரீக்கா மூலம் அடைய வேண்டிய தேவைகளை அடைய முடியாதுஎன்பதை யாவரும் நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும் .
நான் காதிரிய்யாத் தரீக்காவைச் சேர்ந்தவன் ;என் தரீக்காவே மேலானது எனவும் ,நான் ஷாதுலிய்யாத் தரீக்காவைச் சேர்ந்தவன் ;என் தரீக்கா அதைவிட மேலானது எனவும் ,நான் நக் ஷபந்திய்யாத் தரீக்காவைச் சேர்ந்தவன் ;என் தரீக்காவே இவைகளைவிட மேலானது எனவும் ,ஒவ்வொரு தரீக்காக்காரரும் ஒருவரோடு ஒருவர் மோதித் தம் வாழ்நாட்களைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர் .
அதுமட்டுமல்லாமல் தரீக்காக்களின் தலைவர்களான குத்புல் அக்தாப் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி ),குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி ( ரலி )முதலான மாபெரும் மலைகளான மகான்களான மஷாஇகூன்களையும் கண்டவாறு பேசி இழிவு படுத்துகின்றனர் .இப்படிப்பட்டோர் இழிவுபட்டு நாயினுங்கேடுகெட்டு வாழவழி காணாது மாபெரும் தண்டனைகளுக்கெல்லாம் அகப்பட்டுக் கூட்டம் குடும்பத்துடன் அழிந்து நாசமாகியதைக் கண்டுங்கேட்டுமிருக்கிறோம் .எனவே இந்த விடயத்தில் கவனமாகவும் எச்சரிக்கையுடனுமிருத்தல் வேண்டும் .இறை இத்தகைய சோதனைகளிலிருந்து எம் யாவரையும் காப்பாற்றுமாக !
( பேரின்பப்பாதை - நூலிருந்து.. ) கொய்தமலர்