• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »    2014    »    Apr2014    »    விற்போர்விழிப்புணர்வுக் கழகம்


ஹதீஸ் பக்கம்


விற்போர்விழிப்புணர்வுக் கழகம்

கலீபா - ஆலிம் புலவர்



நாம் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கும்போது அது தரமானதா ?குறையுள்ளதா ?எடை சரியாக இருக்கிறதா ?தேதி காலாவதியான பொருளா ?என்பதை யெல்லாம் சற்று விழிப்புணர்வோடு வாங்க வேண்டும் ;கடைக்காரர் நம்மை ஏமாற்றிவிடக்கூடாது என எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களை எச்சரிக்கும் இயக்கமாக “நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்புகள்” செயல்பட்டு வருகின்றன !

இஸ்லாத்தைப் பொறுத்தவரை “நுகர்வோர் விழிப்புணர்வை” அது வற்புறுத்தவில்லை .“ விற்போர் விழிப்புணர்வைத்தான்” மிக முக்கியமாக அது வலியுறுத்துகிறது .

ஆம் !கடையில் சாமான்களை விற்பவர்கள் தாம் நாம் சரியான பொருளைத்தான் மக்களுக்குக் கெடுக்கிறோமா ?என விழிப்போடு விற்கவேண்டும் !ஏனென்றால் அளவு குறையாக -தரம் குறைவாக கண்களை மறைத்து விற்றால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என வியாபாரிகளை அது எச்சரிக்கிறது !


அல்லாஹ் தன் அருள்மறையில் ........அளவில் மோசம் செய்பவர்களுக்கு வைல் எனும் நரகம் தான் ( கிடைக்கும் ). அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்கின்றனர் . மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து ( அவர்களை நஷ்டப்படுத்தி ) விடுகின்றனர் . (30-83.1,2,3.)



அளவை -நிறுவையில் மோசடி செய்வோருக்கு ( SpecialHell )சிறப்பு நரகத்தை தயார் செய்து வைத்திருப்பதாக அறிந்த வியாபாரி அளவை -நிறுவையில் மோசடி செய்வாரா ?



இப்போதெல்லாம் கடைகளில் கண்காணிப்பு காமிராக்களை நிறுவி கடைகளைக் கண்காணிக்கிறார்கள் .ஆனால் இறைவன் இஸ்லாமிய வணிகரின் மனதையே கண்காணிப்பு காமிராவாக மாறச் செய்திருக்கிறான் .ஆஹா !தவறாக பொருளை வாங்கிவிட்டோமே .....!என வாங்குவோர் பதறுவதற்கு பதிலாக ,ஆஹா !தவறான -குறையான - பொருளைக் கொடுத்து விட்டோமே !....அல்லாஹ் இதற்கு என்னை தண்டனை தருவானோ ....?எனவியாபாரி பதறும் நிலையைத்தான் இஸ்லாம் உருவாக்கியிருக்கிறது !


சஹாபாக்கள் -இமாம்கள் -பெரியார்கள் -செய்த வியாபாரங்களிலெல்லாம் இந்த ஒழுங்குமுறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது .அந்தப் பழக்க வழக்க மாண்புகளின் படிதான் “ஆஹா !பாய் கடையாச்சே !அங்கு வாங்கினால் நம்பிக்கையாக இருக்குமே !”என்ற மரியாதை முஸ்லிம் வணிகர்களுக்கு இருந்தது !


ஆனால் இன்று அந்த கண்ணியமெல்லாம் காற்றோடு பறந்து போய்விட்டது .


கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் ஹலால் -ஹராம் ( மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை -விலக்கப்பட்டவை )என்பதை உற்றுப்பார்த்த சமுதாயம் ,இன்று சிக்கன் - மட்டன் வாங்கும்போது மட்டுமே ஹலால் -ஹராம் பார்க்கும் சமுதாயமாக மாறிவிட்டது .


இமாம் அபூஹனீபா ( ரஹ் )அவர்கள் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள் .அவர்கள் வெளியே சென்றிருந்த சமயம் அவர்களின் பணியாள் ,குறையுள்ள ஓர் ஆடையை -( அதில் உள்ள குறையைச் சொல்லி வாங்குவோர் சம்மதித்தால் மட்டும் விற்க வேண்டும் என்ற இஸ்லாமிய வரைமுறையினைப் பேணாமல் )விற்றுவிட்டார் !கடைக்குத் திரும்பிய இமாம் அவர்கள் அதனை அறிந்தபோது ,ஹராமான காசு கலந்து விட்டதால் அந்த வியாபாரத்தில் கிடைத்த இலாபம் முழுவதையும் தர்மம் செய்து விட்டார்கள் !


இது வரலாறு !இப்போது கூறுங்கள் !இஸ்லாம் விற்போர் விழிப்புணர்வை வலியுறுத்தும் விந்தையான மார்க்கம் அல்லவா ?