உலக மக்களை ஒன்றிணைக்கும்
ஒற்றுமைச்சித்தாந்தம் !
தங்கம் போல் மின்னுகின்ற மதிப்புமிக்க வார்த்தைகள் பொன்மொழிகள் எனும் பெயரால் போற்றப்படுகின்றன. பொருளாசை நீங்கி அருளாசை தங்கிய அருளாளர்களின் வார்த்தைகள் மக்களின் இருள் நீக்கும் அருள் மொழிகளாக மதிக்கப்படுகின்றன . சிந்தனை மூலம் சிந்துகின்ற ஆறறிவுவாக்கியங்கள் படிக்கவும் ரசிக்கவும் இனிமை சேர்க்கின்றன. சிந்தனைக்கெட்டா சிகரத்தைத் தொட்ட ஆன்மிகஞானிகளின் பேரறிவு வாக்கியங்கள் நடக்கவும் உயிர்க்கவும் துணையாகின்றன .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருத்துத் தேன்துளிகள் சஹாபாக்கள் எனும் தோழர்களின் இதயப் பூக்களில் உறைந்து கிடந்தன. அவற்றை “முஹத்திஸ்” எனும் நபிமொழித்தொகுப்பாளர்கள் ஒவ்வொரு பூக்களிலிருந்தும் உறிஞ்சி எடுத்து, தேனடைகளாக புகாரீ - முஸ்லிம் - திர்மிதீ .... என நபிமொழித் தொகுப்பு நூற்களை உலகுக்கு வழங்கியிருக்கின்றார்கள் .
தேன்துளிகளைச் சேகரிக்க இந்தத் தேனீக்கள் எடுத்துக் கொண்ட கரிசனமும் கடின உழைப்பும் சொற்களால் சொல்லி முடியாதவை! அதேபோல, ஞானிகள் தலைவர் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி ) அவர்களின் உரைகலளெல்லாம் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்று படிப்போருக்கெல்லாம் படிப்பினை தருவதாக இன்றும் உலா வருகின்றன. மனிதர்கள் வாழ்கின்றார்கள். மகான்களோ உயிர்ப்புடன் வாழ்கின்றார்கள். அவர்களின் உயிரில் உயிர்ப்பு இருப்பதால் அவர்களின் வார்த்தைகளில் இருக்கும் உயிர்ப்பு வல்லமையுடையது . " உமருடையநாவில் இறைவன் பேசுகிறான் '' எனும் உத்தம நபிகளாரின் உயர்மொழி நபிமார்களல்லாத நாதாக்களின் வாய்மொழிகளையும் தாய்மொழிகளாகக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது . " மக்களே! நீங்களெல்லாம் இறந்து போகக்கூடிய மனிதர்களிடமிருந்து கல்வி பெறுகின்றீர்கள்.
(மகான்களாகிய) நாங்களோ என்றுமே இறவாத நித்திய ஜீவனான இறைவனிடமிருந்து அறிவு பெறுகின்றோம் '' என்ற ஞானி ஒருவரின் அறிவுரையும் சிந்திக்க வேண்டியதே ! இந்த நூற்றாண்டின் இணையற்ற இறைநேசராக விளங்குபவர்கள் இலங்கை தோன்றியஇமாம் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித்கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்.
உடலளவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் 34 ஆவது தலைமுறை வாரிசாகப் பிறந்தது போல் அகஅளவிலும் அண்ணலாரின் அருள் அனந்தரம் அமைந்தவர்களாகவே இலங்குகின்றார்கள் என்பதை அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன .
தங்கள் தந்தையார்; புகாரீ ஷரீபுக்கு அறபுமொழியில் விரிவுரை எழுதிய ஒரே தமிழ் முஸ்லிம் எனும் தனிச்சிறப்படைந்த- திருமுல்லைவாசலில் அடக்கம் பெற்றுள்ள - குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் தோற்றுவித்த அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா எனும் தரீக்காவை வழி நடாத்தும் ஷைகாக - தலைவராகத் திகழும் இவர்கள், பல நாடுகளில் பல்லாயிரக்கணக்காக வாழும் இஸ்லாமியப் பெருமக்களின் ஞானகுருவாக விளங்குகிறார்கள் .
சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக இஸ்லாத்தின் உயிர்ப்பகுதியான மஃரிபா எனும் மெய்ஞ்ஞானத்தை தங்களின் எழுத்து - பேச்சு - சேவைகளால் பரப்பிவரும் இவர்கள், குர்ஆன் - ஹதீஸ் - இஜ்மாஉ - கியாஸ் - மத்ஹபு - இமாம்கள் - வலிமார்கள் வழி தொடர்ந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றார்கள். "மதங்களால்வேறுபட்டு நிற்கும் மனிதஇனம்ஞானத்தால் ஒன்றுபட முடியும்'' என்ற இவர்களின் ஒற்றுமைச் சித்தாந்தம் அறிஞர்களும் சமூக வல்லுனர்களும் சிந்திக்கவேண்டிய புதியதத்துவமாகும். இன்று அனைத்து சமய மக்களும் உன்மதம், என்மதம் எனப் பெருமை பேசி தங்கள் மதத்தில் கூறப்பட்டிருக்கும் சத்தியத்தை புறந்தள்ளி வாழ்கின்றனரே யன்றி அவர்களின் வாழ்க்கைமுறை தங்கள் சார்ந்த மதங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையையும், இன்னாசெய்தாருக்கு நன்னயம் செய்வதையுமே எடுத்துக்கூறுகின்றன. ஆனால் அந்தோ! இன்று உலகம் போகும் போக்கை சிந்தித்துப்பார்த்தால் இவர்களெல்லாம் மனிதர்களா? இவர்களின் சமயபோதனை இவைதாமா? என நடுநிலையாளர்களும் நாத்திகர்களும் மதம்சார்ந்த மக்களை ஏளனப் பார்வைபார்க்கத் தூண்டுகிறது. கொல்லாமையையே உயிர் மூச்சாகக் கொண்ட புத்தமதத்தினர் பர்மாவிலும் இலங்கையிலும் புத்த மதத்தைக் காப்பாற்ற புத்தரின் கொள்கையை பொய்த்துப்போகச் செய்கின்றனர் . ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், எகிப்து, சிரியா, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தங்கள் சமுகத்தைத் தாங்களே கொன்று குவித்து குர்ஆனின் கொள்கைகளையும் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனைகளையும் வினாக்குறிகளாக்கி வேடிக்கை பார்க்கின்றனர் .
கருணையின் வடிவமாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சித்தரித்து அவர்களின் வழி நடப்பதாகக் கூறும் கிருத்தவர்கள் அதிகமாக வாழும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் உலகில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் ஆணிவேராக - அடிப்படையாக இருந்து உயிர்ப்பலி வாங்குகின்றன. சமயங்களைச் சார்ந்த மக்களே இவற்றையெல்லாம் செய்வதற்குக் காரணம் தங்கள் மதங்களின் சாரத்தை அறிந்து கொள்ளாமைதான் எனத் துணிந்து கூறலாம். இந்த நீக்க முடியா நோய்க்கு ஒரு நிரந்தரத் தீர்வை யாமறிய எந்த ஞானியும் இதுவரை கூறியதாகத் தெரியவில்லை; எங்கள் குருநாதர் குத்புஸ்ஸமான் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலனா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களைத்தவிர!
அந்த அற்புதமான தீர்வுதான் .... " மதங்களால்வேறுபட்டு நிற்கும் மனிதஇனம்ஞானத்தால் ஒன்றுபட முடியும்'' என்ற வழிகாட்டல். அதாவது, சமயங்களின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் பேசினால், என் மதம் உயர்ந்தது... உன்மதம் தாழ்ந்தது என்ற வாதம் ஏற்பட்டு பேதம் அங்கு பிறந்துவிடும். ஆனால் சமயங்களின் ஆழ்நிலை என்னவென சிந்தித்தால் “எல்லாம் ஒன்று எல்லோரும் ஒன்று” எனும் உண்மை வெளிப்பட்டு ஒற்றுமையும் உள்ளன்பும் அங்கு தழைத்தோங்கும். வெளிப்படையாகப் பார்த்தால் அனைவரும் ஓருயிரிலிருந்து தோன்றியவர்கள் எனும் உண்மையும், அந்தரங்கமாகப் பார்த்தால் அனைவரும் அனைத்தும் இறைவனிலிருந்து பிரிக்க முடியாதவர்கள் எனும் கட்டுண்ட நிலையும் தெரிந்துவிடும். அப்போது, நாம் அனைவரும் வெவ்வேறு உடைகளை அணிந்திருப்பது போல வெவ்வேறு சமயப் பெயர்களைத் தாங்கியிருக்கிறோம் எனும் எதார்த்தம் தெரியவரும்.
யாரும் யாருடைய சமயத்தையும் விட்டு வெளியேறத் தேவையில்லாமல் அவரவர் அவரவர் சமய உயிர்க்கருத்தை உணர்ந்து கொண்டால் உள்ளத்தால் - எண்ணத்தால் பிரிவினை நீங்கி ஒன்று பட்டுவாழ முடியும். இக்காலத்தில் யாரும் தங்களின் சமயத்தை விட்டுத்தர மாட்டார்கள். எனவே ஒற்றுமையாக வாழ குறைந்தபட்சத் திட்டமாக இதனைப் பின்பற்றினால் வேதங்களினால் கொண்ட பேதங்கள் நீங்கிவிடும். இதைத்தான் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற ஞானி, ஏகத்துவச் செம்மல் எங்கள் குருநாதர்அவர்கள் இயம்புகின்றார்கள்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை இது எப்படிசாத்தியம்? இஸ்லாத்தை விட்டுவெளியே சிந்திப்பதா? முஸ்லிம்களுக்கு இது தேவையா? எனத்திகைப்பார்கள். ஆனால் இதில் ஓர் இரகசியம் அடங்கியிருப்பதை உற்றுணர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
அதாவது குருநாதர் அவர்கள் கூறுவது, இஸ்லாத்தின் மூலமந்திரமான கலிமாவைத்தான் அனைத்து சமய மக்களும் சிந்திக்க வழி திறந்து வைக்கிறார்கள். கலிமாவின் உட்பொருள் என்ன? அனைத்தும் ஒன்று என்பதுதானே ! சரி ! மற்றமதங்களின் உட் பொருள் என்ன ? அதுவும்அனைத்தும் ஒன்று என்பதுதானே ! இந்த உண்மையை உணர்த்தத்தான் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை எனும் அமைப்பை 40 ஆண்டுகளுக்கும்மேலாக நடாத்தி வருகின்றார்கள். எனவே இந்த உண்மை பரப்பப்படுமானால் வேற்றுமையற்ற உலகமும், அமைதியாக வாழும் மக்களையும் நாம்காணமுடியும்!