• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

யாரஸூலல்லாஹ் ...


எங்களது பாபங்களை மன்னியுங்கள்


எஸ். காதிமுல் கலீல் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய்- திருச்சி.

மண்ணில் அடக்கப்பட்டவர்களில் சிறந்தவரே!


உங்கள் எலும்புகளின் நறுமணத்தால்

மண்ணும் மலைக் குன்றுகளும் மணம் கமழ்கின்றன.

நீங்கள் துயிலுறும் இந்த பொன்னறைக்கு எமதுயிர் அர்ப்பணம்!

தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது. தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் இங்குதான் உறங்குகின்றன என்று பாடி அந்த கிராமவாசி சென்றுவிட்டார். நான் அயர்ந்து உறங்கினேன். கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டபோது அவர்கள் என்னிடம், உத்பீ அவர்களே! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நற்செய்தி கூறுங்கள் என்று சொன்னார்கள். நான் நற்செய்தி கூறினேன் என உத்பீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(நூல் : இப்னு கதீர் : 1 - 520, ­ரஹ் முஹத்தப் : 8 - 274)


அதே போல் ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து அடக்கம் செய்து மூன்று நாள் கழித்த பிறகு ஒரு கிராம அரபி வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது விழுந்தார். தலையில் மண் படிந்திருந்தது. யாரஸூலல்லாஹ்! தங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டுள்ளேன்.  அல்லாஹ் இறக்கி அருளிய (4 : 64) வசனத்தை உங்கள் மூலம் கேட்டுள்ளேன்.  எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். ரப்பிடத்தில் எனக்காக தாங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று (இதோ) இப்போது தங்கள் தர்பாருக்கு வந்துள்ளேன். எனக்காக மன்னிப்புக் கோருவீராக! என்றார். அப்போது உமது பாவம் மன்னிக்கப்பட்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் ரவ்ளாவி (கப்ரி) லிருந்தே சப்தம் வந்தது.

(நூல் : தப்ஸீர் குர்துபி)



திருநபியவர்களின் மறைவிற்குப் பிறகும் தமது உம்மத்தார்களில் உதவி தேடுபவர்களுக்கு உதவியளிப்பார்கள், இன்னும் சிபாரிசும் செய்வார்கள் என்று மேற்கூறப்பட்ட சம்பவங்களில் இருந்து தெரிகிறது. இந்த சம்பவங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக ஒரு ஹதீஸ் இருக்கிறது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என் வாழ்வும் உங்களுக்கு நன்மையானதே. நீங்கள் என்னோடு பேசினீர்கள்.  நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்தேன். என் மரணமும் உங்களுக்கு நன்மையானதே. உங்கள் அமல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அது நல்லதாக இருந்தால் அவருக்காக அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். அது தீயதாக இருந்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(நூல் : பஜ்ஜார் - 845, மஜ்மஉஜ்ஜவாயித் - 14250).


மேற்கூறப்பட்ட ஆயத் மற்றும் ஹதீஸ்களின்படி பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாவ மன்னிப்பிற்கான சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மறைவு வாழ்விலும் நாம் நமது பாவங்களின் மன்னிப்பிற்னான சிபாரிசு செய்யக் கோரினால் நிச்சயம் சிபாரிசு செய்வார்கள்.


நபிகளாரின் சிபாரிசை இறைவன் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்.


2. பெருமானார் அவர்களின் பொருட்டால் பாவ மன்னிப்புத் தேடுதல்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவதை இறைவன் தன் திருமறையில்,

அவர்களுக்கு (நபியவர்களிடம் சப்தத்தைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு) மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது. 49 : 3)

அல்லாஹ் தன் அடியார்களுக்கு நபியவர்களின் சப்தத்தை விட உங்களது சப்தத்தை உயர்த்த வேண்டாம். அதன் மூலம் உங்களது நல் அமல்கள் அழிக்கப்படும்.  நீங்கள் அறிய மாட்டீர்கள். (49:02) நபியவர்களிடம் சப்தமாகப் பேசினால் பாவம்.  நபியவர்களிடம் சப்தத்தைத் தாழ்த்திப் பேசினால் மன்னிப்பு. எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சாந்தமாகப் பேசுவதின் மூலம் (பெருட்டால்) பாவ மன்னிப்பு கிடைக்கிறது. மேலும் இறைவன்,

நபி ஆதம் (அலை) அவர்கள் தனது ரப்பிடம் சில வார்த்தைகளைப் பெற்றுள்ளார்கள். எனவே அதன் பொருட்டால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான். (பகரா 2 : 37)


ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தில் செய்தவற்றிற்காக அல்லாஹ்விடம் 300 ஆண்டுகள் மன்னிப்பு கேட்டும் கிடைக்காமல் ஒரு நாள் அல்லாஹ்விடம்...

யா அல்லாஹ் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக! என்று கேட்டார்கள்.

(நூல் : ரூஹுல் பயான் பக்கம் 230 / 1)



இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


ஆதம் (அலை) அவர்கள் நபிகளாரின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறியபோது, உமக்கு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை எப்படித் தெரியும்? என்று இறைவன்கேட்டான். அப்போது ஆதம் (அலை) அவர்கள்,...

எனக்கு உயிர் கொடுத்த பின் உன் மாண்பான அர்ஷி வாசலில் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற திருவாசகத்தைக் கண்டேன்.  அவர் உனக்கு பிடித்தமானவர் என்று அறிந்து கொண்டேன். எனவே அவரின் பொருட்டால் மன்னிப்புத் தேடினேன் என்றார்கள். அப்போது இறைவன் அவரின் பொருட்டால் நீர் மன்னிப்புக் கேட்டதால், நான் உனக்கு மன்னிப்பு அளித்தேன். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லையெனில் நான் உன்னைப் படைத்திருக்கவும் மாட்டேன் என்று இறைவன் கூறினான்.

(நூல் : முஸ்தக்ரக் 2 : 615)


அதே போன்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தாயார் அலீ அல் ஹைதர் அவர்களின் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்களின் மறைவின் போது நபி அலைஹி வஸல்லம் அவர்கள்,


யா அல்லாஹ்! எனது பொருட்டாலும், எனக்கு முன் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயை மன்னித்து விடு என்று துஆச் செய்தார்கள். (நூல் : தப்ரானி 8 : 41). இன்னும் வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:


பனீ இஸ்ராயீலர்களில் ஒருவர் 200 வருடங்களாக அல்லாஹ்விற்கு மாறு செய்து கொண்டிருந்தார். இவ்வாறு பல பாவங்களைச் செய்து மரணித்து விட்டார்.  மக்கள் அவரது உடலை மாட்டுக் கொட்டத்தில் தூக்கி எறிந்து விட்டனர். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு நல்லடக்கம் செய்வீராக என வஹீ அறிவித்தான்.  அப்போது மூஸா (அலை) அவர்களிடம் பனூ இஸ்ராயீல்கள் - இவர் பாவி, மோசமானவர் எனக் கூறினார்கள். இவ்வாறிருக்க நீ இப்படிக் கூறுவதன் பொருள் என்ன, என்று மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் கேட்க அதற்கு அல்லாஹ், அவரைப் பற்றி பனூ இஸ்ராயீலர்கள் சொல்வது சரிதான். எனினும் அவர் தெளராத்தைத் திறந்ததும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் அதை முத்தமிட்டு அவரது இரு கண்களிலும் ஒற்றிக் கொள்வார். இதனால் தான் அவரது பாவங்களை மன்னித்து விட்டேன் என்று கூறினான்.

( நூல் : ஹில்யதுல் அவ்லியா 4 / 46, சீரதுல் ஹலஃபிய்யா 1 / 85 )


மேற்கூறப்பட்ட ஆயத்திலும், ஹதீஸிலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பொருட்டால் பாவ மன்னிப்புத தேடலாம். தேடுவது கூடும்.  இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தங்களது தாய்க்கு தங்களின் பொருட்டாலும், மற்ற நபிமார்கள் பொருட்டாலும் பாவ மன்னிப்புத் தேடியிருக்கிறார்கள். எனவே பாவ மன்னிப்பு தேடலாம்.

(தொடரும்) ...