சாலைப்பராமரிப்பு !
இஸ்லாம் ஓர் ஆச்சரியமான சமயம் .இறை நம்பிக்கையில் ஒருபுறம் கடவுளோடு சம்பந்தப்பட்ட நம்பிக்கையைக் கூறுகிறது .மறுபுறம் மனிதர்களோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷ யத்தை வலியுறுத்துகிறது .
பாதையில் கிடக்கும் கல் -முள் -மற்றும் இடைஞ்சல் தருவதை அகற்றுவதற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ? ஆனால் இஸ்லாம் சம்பந்தப்படுத்துகிறது ,அதாவது ,இறைவனை நம்பிக்கை கொண்டு அவனை வணங்கி வழிபட ,காடுமேடுகளில் சென்று ஒதுங்கி வாழ்வதைவிட மனிதர்களின் துன்பத்தை நீக்குவதும் இறைநம்பிக்கையின் ஒரு கிளை என தொடர்புபடுத்துகிறது !
இந்த ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வாசகம் “ பாதையில் இருக்கும் நோவினைகளை அப்புறப்படுத்துவது ”என்பதாகும் !
இந்த வாசகம் குறுகிய ஒரு பொருளைக் கொண்டதல்ல .விரிவான கருத்துகள் இதில் அடங்கிக் கிடக்கின்றன . அதாவது ,மனிதனின் பிரயாணத்திற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நீக்கி டின் சுகமான பிரயாணம் அமையும்தானே !
“ அஸ்ஸஃபரு கித்அதும் மினன்னார் ”பிரயாணம் ஒரு “ நெருப்பின் ஒரு கங்கு ”என்பதும் அண்ணலாரின் அறிவு மொழிதான். அதாவது சுடும் நெருப்பின் அங்கமான பிரயாணம் மனிதனுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு போல் துன்பம் தருவது !
என்னதான் சொகுசாக மனிதன் பிரயாணப்பட்டாலும் வீடு வந்து சேர்ந்ததும் ஒரு நிம்மதி பிறக்கிறதல்லவா ?
இந்த ஹதீஸின் கருத்துப்படி பிரயாணப்படுவோருக்கு வழிகாட்டுவது ,தங்கி இளைப்பாறிச் செல்ல நிழற்குடைகள் அமைப்பது ,நீர் -உணவுக்கு ஏற்பாடு செய்வது ,சாலைகளை குண்டு குழியின்றி பராமரிப்பது ,திருடர்களின் வழிப்பறியிலிருந்து காப்பது போன்ற அனைத்து செயல்களும் “ செயல்கள் ” என்ற பெயரில் சுருங்கி விடாமல் “ அமல்கள் ”என்ற பெயரில் விரிவடைந்திருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும் .