• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »     2014     »     Feb 2014      »     சாலைப்பராமரிப்பு


சாலைப்பராமரிப்பு !

- ஆலிம்புலவர் -


அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் .


இறைவிசுவாசம் ( ஈமான் )எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உடையது .அதில் உயர்ந்தது லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என ( நம்பி ஏற்று )க் கூறுவது .அதில் தாழ்ந்தது பாதையின் இடறுகளை நீக்குவதாகும் .


இஸ்லாம் ஓர் ஆச்சரியமான சமயம் .இறை நம்பிக்கையில் ஒருபுறம் கடவுளோடு சம்பந்தப்பட்ட நம்பிக்கையைக் கூறுகிறது .மறுபுறம் மனிதர்களோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷ ­ யத்தை வலியுறுத்துகிறது .


பாதையில் கிடக்கும் கல் -முள் -மற்றும் இடைஞ்சல் தருவதை அகற்றுவதற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ? ஆனால் இஸ்லாம் சம்பந்தப்படுத்துகிறது ,அதாவது ,இறைவனை நம்பிக்கை கொண்டு அவனை வணங்கி வழிபட ,காடுமேடுகளில் சென்று ஒதுங்கி வாழ்வதைவிட மனிதர்களின் துன்பத்தை நீக்குவதும் இறைநம்பிக்கையின் ஒரு கிளை என தொடர்புபடுத்துகிறது !


இந்த ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வாசகம் பாதையில் இருக்கும் நோவினைகளை அப்புறப்படுத்துவது என்பதாகும் !


இந்த வாசகம் குறுகிய ஒரு பொருளைக் கொண்டதல்ல .விரிவான கருத்துகள் இதில் அடங்கிக் கிடக்கின்றன .  அதாவது ,மனிதனின் பிரயாணத்திற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நீக்கி டின் சுகமான பிரயாணம் அமையும்தானே !

அஸ்ஸஃபரு கித்அதும் மினன்னார் பிரயாணம் ஒரு நெருப்பின் ஒரு கங்கு என்பதும் அண்ணலாரின் அறிவு மொழிதான்.  அதாவது சுடும் நெருப்பின் அங்கமான பிரயாணம் மனிதனுக்கு சுட்டெரிக்கும் நெருப்பு போல் துன்பம் தருவது !


என்னதான் சொகுசாக மனிதன் பிரயாணப்பட்டாலும் வீடு வந்து சேர்ந்ததும் ஒரு நிம்மதி பிறக்கிறதல்லவா ?


இந்த ஹதீஸின் கருத்துப்படி பிரயாணப்படுவோருக்கு வழிகாட்டுவது ,தங்கி இளைப்பாறிச் செல்ல நிழற்குடைகள் அமைப்பது ,நீர் -உணவுக்கு ஏற்பாடு செய்வது ,சாலைகளை குண்டு குழியின்றி பராமரிப்பது ,திருடர்களின் வழிப்பறியிலிருந்து காப்பது போன்ற அனைத்து செயல்களும் செயல்கள் என்ற பெயரில் சுருங்கி விடாமல் அமல்கள் என்ற பெயரில் விரிவடைந்திருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும் .