• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »     2014     »     Feb2014    »       உமர் (ரலி) புராணம்


உமர் (ரலி) புராணம்

ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


அகழ்யுத்தம்



                              மாரிபோலு   மம்பும் பாய

                                                 வாரிபோன்ற மாய மாந்தர்

                                சாரிசாரி யாக நின்று

                                                சீரிலாது வேல்கள் வீச

                                சேரலர்வாள் சேர்ந்து வீசி

                                                காரின்மின்னும் மின்ன லென்ன

                                ஊரலர்தா   மூறு செய்து

                                                கோர   நரகு போவரே .


கொண்டு கூட்டு :


வாரிபோன்ற மாய மாந்தர் சாரிசாரியாக நின்று சீர் இலாது வேலும் வீச மாரி போலும் அம்பும் பாய காரில்   மின்னும் மின்னல் என்ன சேரலர்வாள் சேர்ந்து வீசி ஊரலர்தாம் ஊறு செய்து கோர நரகு போவார் .


பொருள் :
   

கடல் போன்ற மாய வினைகளைச் செய்யும் மாந்தர் கூட்டம் , கூட்டமாக நின்று ஒழுங்கற்ற முறையில் வேல்களை வீசினர் .   மழைபோல் அம்பும் மற்றவர்கள் மேற்பாயவாயின . பகைவர்கள் வாள்களை ஒன்று சேர்ந்து வீச அது இருளில் மின்னும் மின்னற் போல் காட்சியளிக்கும் . அன்பு அற்ற அந்தப் பகைவர்கள் கேடு செய்து கொடிய நரகினுக்குப் போவரே .


குறிப்பு :



மாரி : மழை .   வாரி : கடல் .   சாரி சாரி : கூட்டம் கூட்டம் .   சேரலர் : பகைவர் . கார் : இருள் .   ஊர் : ஈரம் . அன்பு : நெஞ்சில் அன்பில்லாதோர்