• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai »     2014    »     Jan2014    »   நல்ல பெண்மணி

மகளிர் பக்கம்                                                                                               நெடுந்தொடர்

நல்லபெண்மணி

(நன்றி:முஸ்லிம்பெண்களுக்கு -எம் .ஆர் .எம் .முகம்மதுமுஸ்தபா )


ஆடம்பரத் திருமணங்கள் ,அவை நடத்தப்படும் போது மகிழ்ச்சியையும் ,நடந்து முடிந்த பின் கவலையையும் தரக் கூடியவையாகும் .வாணிபம் செய்பவர்களாய் இருந்தால்,அவர்கள் வாணிபத்தில் புரண்ட பணத்தையயல்லாம் எடுத்துப் போட்டு ஆடம்பரமாகத் திருமணம் செய்து விடுகின்றனர் .உத்தியோகம் பார்ப்பவர்களாய் இருந்தால் ,அவர்கள் தம் எதிர்காலச் சேமிப்பையயல்லாம் வாங்கிப் போட்டு ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்திவிடுகின்றனர் .அதன்பின் அவர்கள் நிலை என்ன தெரியுமா ?வாணிபத்தில் முதல் இல்லாததால் கடன் வந்து விடுகிறது .உத்தியோகத்தில் சேமிப்பு இல்லாததால் கடன் வந்து விடுகிறது .ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி ,பணத்தை அள்ளி வீசி ஆட்டம் போட்டவர்கள் நிலை இதற்கு மாற்றமாக இருக்க முடியாது .எனவே ,நீங்கள் உங்கள் கணவரை இவ்விதம் இழுத்துவிட்டு ,அவர்மீது சுமையை ஏற்றிவிட்டு விடாதீர்கள் !சக்திக்கு மீறிய சுமையை எவள் ( தன் )கணவன் மீது சுமத்துகிறாளோ ,அவளுடைய நன்மைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை மனதில் கொள்ளுங்கள் !


திருமணம் அல்லாஹ் விதித்தது .அவன் தூதர் விரும்பியது .அதனால் திருமண வீட்டில் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்றும் ,அவன் தூதரின் ஆசி இறங்குகிறது என்றும் சொல்லப் படுகிறது .ஆனால் ,அந்தத் திருமண வீடு அல்லாஹ் விரும்பும் விதம் இருக்க வேண்டும் .அவன் தூதர் வெறுக்கும் விதம் இருக்கக் கூடாது .நல்லவர் ஒருவருக்குத் திருமணம் நடக்க விருந்தது .அப்பொழுது அவர் ஒரு கனவு கண்டார் .அக்கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ,அவர்களின் அருமை மனைவி ஆயிஷா ( ரலி )அவர்களும் தோன்றினார்கள் .அந்த நல்லவர் ,அவர்கள் இருவரிடமும் தம் திருமணத்திற்கு அவர்கள் அவசியம் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார் .அதைக் கேட்டு ஆயிஷா ( ரலி )அவர்கள் ,அங்கு பித்அத்துகள் நடக்குமே ,நாங்கள் எப்படி வரமுடியும் ?என்று கூறினர் .அதற்கு அந்த நல்லவர் அவ்விதம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார் .அவ்விதமானால் நாங்கள் வருகிறோம் என்று அவர்கள் கூறினர் .அவர் அவர்களிடம் வாக்களித்தபடி தம் திருமணத்தை அடக்கமாக நடத்தினார் .எனவே நீங்களும் உங்கள் பெண் மக்களுக்கும் ,ஆண் மக்களுக்கும் ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாகவே திருமணம் நடத்தி ,அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள் .அவன் தூதரின் ஆசியைப் பெறுங்கள் !


திருமணத்தன்று உங்கள் மருமகனையும் ,மருமகளையும் எப்படி நடத்தினீர்களோ அப்படியே திருமணத்திற்குப் பிறகும் நடத்துங்கள் !உங்கள் மருமகன் எப்பொழுதோ உங்கள் வீட்டிற்கு வருவார் .அப்பொழுது அவருக்குரிய கண்ணியத்தை அளியுங்கள் !பணக்கார மருமகனை மதிப்பதும் ,ஏழை மருமகனை மதியாததும் சில பெண்கள் இயல்பு .அந்த இயல்பு உங்களிடம் இருக்க வேண்டாம் .மருமகனை உங்கள் பிள்ளை போல் கருதுங்கள் ,அவ்விதமே நடத்துங்கள் .


உங்கள் அந்தஸ்திற்கு மேற்பட்ட பெண்ணா ?அதற்கேற்றாற்போல் நடத்துங்கள் !உங்கள் அந்தஸ்திற்குக் குறைந்த இடத்துப் பெண்ணா ?அதற்காக அவளைக் குறைவாய் நினைக்காதீர்கள் ,கேவலமாய் நடத்தாதீர்கள் !அவள் கொடுத்த வரதட்சிணையையும் ,அவள் கொண்டு வந்த சீர்களையும் பழித்துப் பேசாதீர்கள் ,இழித்துப் பேசாதீர்கள் !அவளையும் ,அவள் பெற்றோர்களையும் குறைத்துப் பேசாதீர்கள் ,குத்திப் பேசாதீர்கள் !உங்கள் மருமகளை உங்கள் மகள் போல் கருதுங்கள் ,அவ்விதமே நடத்துங்கள் !


உங்கள் மருமகள் ,உங்கள் மகனின் மனைவி அல்லவா ?அவள் பெற்றுத் தரும் பிள்ளைகளால் அல்லவா உங்களின் குடி தழைக்கப் போகிறது ?அவளின் மனம் புண்பட்டுப் போனால் ,அவளின் உடல் நலம் கெட்டுப் போகாதா ?மனம் புண்பட்ட அவளால் உங்களுக்கு நல்ல சந்ததிகளைப் பெற்றுத் தர இயலுமா ?உடல் நலமும் அறிவு வளமும் அமைந்த பிள்ளைகளைப் பெறுவதற்கு ,அவளின் உள்ளம் நலமாக இருக்க வேண்டாமா ?

( தொடரும் )