ஒரு ராஜா தினந்தோறும் நகர்வலம் வருவார். அப்போது இளைஞன் ஒருவன் மரத்தடியில் அசைவின்றிச் சிலை போல தியானத்தில்அமர்ந்திருப்பதைப் பார்த்தார். ஒரு நாள் மன்னர், நான்தான்இந்த நாட்டின் அரசன். உங்களது தவத்தால் நான் ஈர்க்கப்பட்டுவிட்டேன் . நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும் . நான் உங்களைக் கவனித்துக் கொள்வேன் என்றார். அந்த இளைஞன் போகலாம் என்று அரசனுடன் சென்றுவிட்டான்.
அரசன் அரண்மனையில் நல்ல வேலையாட்களை அமர்த்தி இளைஞனைக் கவனித்துக் கொண்டான். இளைஞன் மறுப்பின்றி அனைத்தையும் ஏற்றுக்கொண்டான். அரசனின் மனதில் இளைஞன் பற்றிய மதிப்பு குறைந்து கொண்டேயிருந்தது. அரசன், தான் ஏமாற்றப்பட்டதாகநினைத்தான்.
இளைஞனிடம் ஒரு நாள் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில் தான் இருக்கிறீர்கள், எல்லாச் சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும்எனக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கேட்டான்.
நீ என்னுடன் உனது எல்லையைத்தாண்டி வா! பதில் சொல்கிறேன் என்றான் இளைஞன். சிலமைல் தூரத்தில் உள்ள நதிக்கரைதான் அரசனின் எல்லை. இருவரும் நதியைக் கடந்தனர். கரையைக் கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன் , என்னுடன் வர நீ தயாரா? இது தான் என் பதில்! என்றான்.
அரசன் என்னால் எப்படி முடியும்? என்னுடைய அரண்மனை , என்னுடைய அரசாங்கம் , என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்... ஆயிரக்கணக்கான பிரச்சினைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்? என்றான்.
இளைஞன், வித்தியாசத்தைப்பார்த்தாயா? நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்சினைகள்என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் - இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி , அரண்மனையில் இருந்தாலும் சரி , எனது விழிப்புணர்வு அதேதான் என்றான்.