• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jul 2014      »    சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)



சங்கைமிகு இமாம்ஷாஃபிஈ (ரஹ்)

அறபுத்தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகுதமிழில்: கிப்லா ஹள்ரத் , திருச்சி.


கல்வியைத் தேடு ! அது உன்னை நாடும் !

இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்:


குறிக்கோள் இல்லாமல் கல்வியைத்தேடுகிறவன் கடும் இரவில் விறகைப் பொறுக்குகிறவன் போலாவான். அவன் விறகைத்தான் எடுக்கிறானா? பாம்பைப் பிடிக்கிறானா? என்பதை அவன் எப்படி அறிவான்?


கல்வியைக் கற்கும் போதே அதன்நுணுக்கத்தையும் நுட்பத்தையும் இலக்கணத்தையும் இணைத்தே கற்க வேண்டும். பின்னாட்களில் பார்த்துக் கொள்ளலாம்என்று நினைத்தால் அது தப்பியே போகும் ; நிறைவேறாது.



ஹள்ரத் முஸ்னீ ( ரஹ் ) அவர்கள்:


இமாம் அவர்களே ! தாங்கள் கல்வி இன்பத்தை எவ்விதம் அனுபவித்தீர்கள் ?



இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள்:


ஒரு புதிய வார்த்தையை யான்கற்றால் இதற்கு முன் கேளாத சொற்களையெல்லாம் கேட்டதாக உணர்வேன். என்னுடைய உடலுறுப்புகளனைத்தும்தம் தமக்குள்ளே காதுகள் உண்டானது போல் அவ்வார்த்தைகளைக் கேட்டு மகிழும்; இரு செவிகளும் மகிழ்வது போல்!



ஹள்ரத் முஸ்னீ ( ரஹ் ) அவர்கள்:


கல்வி கற்க வேண்டும் என்பதில்தங்களுக்கு எந்த அளவுக்கு அவிழ்க்கை - ஆசை - ஆர்வம் இருந்தன ?



இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள்:


உலகில் இன்பமாய் வாழ - பணம் சம்பாதிப்பதில் ஒருவன்எவ்வளவு ஆர்வமும் ஆவலும் தேட்டமும் காட்டுவானோ அதனை விட கல்வி கற்பதில் நான் ஆசையும்ஆர்வமும் ஆவலும் நிறைந்தவனாக - அக்கரை உள்ளவனாக இருந்தேன்!



ஹள்ரத் முஸ்னீ ( ரஹ் ) அவர்கள்:


இமாம் அவர்களே, கல்வியைத் தாங்கள் தேடிய விதம்?



இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள்:


ஒரு பெண்ணிற்கு ஒரேயொரு குழந்தைதான்இருந்தது. அக்குழந்தைபிரயாண வழியில் காணாமற் போய்விட்டது எனில் அத்தாய் எவ்வளவு பாடுபட்டு அக்குழந்தையைத்தேடித்தேடி அலைபாய்வாளோ அவ்விதம் யான் கல்வியைத் தேடித்தேடி ஓடிக் கற்றுக் கொண்டேன்.


மேலும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள் : கல்வியைப் பிரியம் வைக்காதவனால், கல்வியை நேசிக்காதவனால் எந்தப்புண்ணியமும் இல்லை. அவனிடம் தோழமை வைக்காதீர்கள்; அவனிடம் எந்தச் சகவாசமும் கொள்ளாதீர்கள்.



மேலும் இமாம் ஷாபிஈ ( ரஹ் ) கூறுகிறார்கள்:


நற்சேவைகள் செய்ய வேண்டும் - நல்லறம் புரிய வேண்டும் என்னும்நோக்கம் இருக்கும் கல்வி, கற்புடையது. அவ்வாறில்லாத கல்வியால் எந்தப் புண்ணியமும் இல்லை! சேவை மனப்பான்மையில்லாத கல்வியைக்   (கல்வியாளர்களைக்) கண்டு நான் அஞ்சுகிறேன்.


(உலமாக்கள் குறித்து .. இமாமவர்களின் கருத்து இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில்)