ஹதிஸ் பக்கம்
அறிய வேண்டிய சட்டங்கள்
அல்லாஹ் அருளுகின்றான்:
(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடுமையாகக் காண்பவர்கள்அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாக கொடுக்கின்றாரோஅது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களாயின்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்என்பதை உணர்வீர்கள்.
நோன்புநோற்க இயலாதவர்கள் ஒரு நோன்புக்குப் பகரமாக ஹனபி மத்ஹப் படி 1600 கிராம் கோதுமையோ, அல்லது அதன் கிரையத்தையோ கொடுக்க வேண்டும். அல்லது ஸஹர் இஃப்தார் ஆகிய இரண்டு நேரத்திலோ , மற்ற காலங்களில் இரண்டு நேரத்திலோ வயிறு நிறைய உணவளிக்க வேண்டும். (ஹனபிசட்ட நூல், ஹிதாயா)
ஷாஃபி மத்ஹபைச்சேர்ந்த நோன்பு நோற்க இயலாதவர்கள் விடுபட்ட ஒரு நோன்புக்குப் பகரமாக 2400 கிராம் அரிசியோ, கோதுமையோ வழங்க வேண்டும்.
அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். எவர் ரமளானைத் தொடர்ந்து ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலம் முழுதும் நோன்பு நோற்றவர் போலாவார். (நூல் : முஸ்லிம்)
இப்னு உமர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஃபித்ரா வரியினை பேரீத்தம் பழமாக ஒரு ஸாஉ, அல்லது அடிமைகளுக்கு தொலிக்கோதுமையில்ஒரு ஸாஉ , சுதந்திரமான ஆண்; ஆண் பிள்ளைகள், பெண்; பெண்பிள்ளைகள், சிறியவர்கள் , பெரியவர்கள், மற்றும் எல்லா முஸ்லிம்களும், தொழும் திடலுக்குச் செல்லும்முன் அதனை வழங்கி விட வேண்டும். அது கட்டாயக் கடமையாகும் என அருளினார்கள். (நூல் : மிஷ்காத் 160)
வீட்டிலுள்ள அத்தனை நபர்களுக்கும் ஸதக்கத்துல் ஃபித்ர் வழங்க வேண்டும். அதாவது ஹனபி மத்ஹபைச் சேர்ந்தோர் 3200 கிராம் கோதுமை, அல்லது அரிசி, அல்லது அதன் கிரையத்தை வழங்க வேண்டும் .
நோன்புநோற்றிருப்பவர் கஃப்பாராவை விதியாக்கும் செயலைச் செய்து விட்டால் அதற்கு தண்டனையாக (1) அடிமை ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் (2) அல்லது இரண்டு மாதங்கள் விடாமல் தொடர்ந்துநோன்பு நோற்க வேண்டும். (3) அல்லதுஅறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.