• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    May 2014    »    உமர் ( ரலி ) புராணம்

உமர் ( ரலி ) புராணம்

ஆசிரியர் 


ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்




முதலாவது உதய காண்டம்


எல்லாப் பொருட்கு மிறையோ னீயே
வல்லவ னீயே மனநிறை நீயே 
இல்லவ னென்றிலா வுள்ளவ னீயே 
நல்லவ னீயே நாமுனைப் போற்றுதும் .

 


கொண்டுகூட்டு :


எல்லா பொருட்கும் இறையோன்  நீயே. வல்லவன்  நீயே. மன( ம் ) நிறை( ந்தவன் )    நீயே. இல் அவன் என்று இ ( ல் ) லா உள்ளவன்  நீயே. நல்லவன்  நீயே.   நாம் உ ( ன் ) னைப் போற்றுதும்.


பொருள் :


எல்லாப் பொருள்களுக்கும்  இறையவன் நீயே. வல்லவன் நீயே. மனத்துள் நிறைந்துள்ளவன்  நீயே. இல்லாதவன் என்று இல்லாது உள்ளவனாய் உள்ளவன்  நீயே . ( நல்லவனாய் நின்று நன்மை பயப்பவனும் நீயே ) நல்லவனும் நீயே. நாம் உன்னைப் போற்றுகின்றோம். இல்லையென் போர் அதையே உள்ளது எனின் அதுவே கடவுளாகும் . இல்லாதது எங்கே எனத் தேடிப் பார்த்தால் அஃது அங்கேயே இருக்கும். எனுங் 

கருத்துடைத்து .


குறிப்பு :


போற்றுதும் : தவ்வொடு இறப்பும் எதிர்வும் து - தும்   (- நன்னூல் : பா என்றதனால், வந்து என்பது வந்தேன் என ஒருமை இறப்பும், வந்தும் என்பது வந்தோம் எனப்பன்மை இறப்பும், வருது என்பது வருவேன் என ஒருமை எதிர்வும் வருதும் என்பது வருவோம் எனப் பன்மை எதிர்வுமாய்அவை வருமென்க.


இறையோன் + நீயே , வல்லவன் + நீயே , உள்ளவன் + நீயே , நல்லவன் + நீயே . ன் + : ன வெனப் புணர்ந்தவை.


கால்வல் :   நெடுந்தேர் :   கால்வ னெடுந்தேர் ( திருக்குறள் )