சங்கைமிகு இமாம்ஷாஃபிஈ (ரஹ்)
அறபுத்தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகுதமிழில்: கிப்லா ஹள்ரத் , திருச்சி.
இல்ம் என்னும் அறிவு குறித்து இமாம் ஷாபிஈ( ரஹ் ) அவர்கள் அருளிய சில தத்துவ முத்துக்களைக் காணலாம்!
ஒரு முறை இமாம் ஷாபிஈ( ரஹ் ) அவர்கள் கூறினார்கள் :
இல்மை ( அறிவைத் ) தேடுவது ஸுன்னத் தொழுவதைக் காண ஏற்றமானதாகும் - சிறந்ததாகும்!
மேலும் ஃபர்ளு தொழுகைக்குப் பிறகு இல்மை ( அறிவைத் ) தேடிக்கற்பது, எல்லா அமல்களிலும் ( நற்செயல்களிலும் ) மேலானதாகும்!
இவ்வாறு இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அருளிய போது, ஒருவர் எழுந்து, அப்படியானால் ஃபீ ஸபீல் ( இறை வழியில் போர் செய்வது ) சிறந்ததா? கல்விகற்பது சிறந்ததா? என்று கேட்டார்.
அதற்கு இமாம் ஷாபிஈ( ரஹ் ) அவர்கள், ஃபீஸபீல் - இறை வழியில் போர் செய்வதை விட கல்விகற்பதே சிறந்தது. ஏனெனில் ஒருவர் ஃபீஸபீல் - இறை வழியில் போர் செய்வதால் அவருக்கு மட்டுமே ஈடேற்றம் கிடைக்கும். ஆனால் , கல்வி கற்பதால் அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் அநேக நன்மைகள் கிடைக்கும்.
மேலும் இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள் அருளுகிறார்கள் :
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நுபுவ்வத்தைக் காண வேறு எந்த வொன்றையும் இவ்வுலகில் சிறந்ததாக மேலானதாகக்கொடுக்கவில்லை! அதாவது இவ்வுலகில் நபிமார்களை விட மேலானவர்கள் வேறு எவருமில்லர்!
அது போல் நுபுவ்வத்திற்கு அடுத்தபடியாக இல்ம் என்னும் அறிவை விட சிறந்தவொன்றை இறைவன் படைக்கவில்லை! அதாவது நபிமார்களுக்குப் பிறகு அறிவாளிகளே மிகச் சிறந்தவர்கள்!. மறுமையில், அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்னும் அருட்கொடையை விட மிகச் சிறந்தது வேறொன்றுமில்லை!
மேலும், இமாம்ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள் அருளுகிறார்கள்: யாராகிலும் ஒருவர் இவ்வுலகை நேசித்தால் - ஆசித்தால் அவர் கல்வி கற்றுக் கொள்ளட்டும்!
யாராகிலும் ஒருவர் மறுவுலகை நேசித்தால்- ஆசித்தால் அவர் கல்வி கற்றுக் கொள்ளட்டும் ! ( அதாவதுகல்வி கற்பதால் ஒருவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியடையலாம் என்பது இதன் கருத்து.
ஓர் ஊரில் கல்வி கற்காமலிருந்தால் அவ்வூரின் அரசு அதிகாரி, அவரைக்கல்வி கற்கக் கட்டாயம் ஏவ வேண்டும்; கல்விகற்க உதவ வேண்டும்... இதுவே எமது மதுஹபின் திட்டமாகும் என்பதாக இமாம் ஷாபிஈ ( ரஹ் ) கூறுகிறார்கள்.
மேலும்ஹள்ரத் இமாம் ஷாபிஈ ( ரஹ் ) அவர்கள்கூறுகிறார்கள் :
நான் இல்மை கல்வியைக் கற்ற 16 வருடங்களும் கோதுமைக் கஞ்சியும் , ரொட்டியும் ஈத்தம் பழமுமேயல்லாது வேறொன்றையும் சாப்பிட்டதில்லை. அக்காலக்கட்டத்தில் மீன் , இறைச்சி வகைகளைக் கண்டதுமில்லை - உண்டதுமில்லை!
மேலும் பசியை மட்டும் நீக்கவேயல்லாது மேற்கொண்டு நான் சாப்பிடுவதில்லை
.( இமாமவர்களின் கல்விப் பிரயாணம் தொடரும் )