• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    May2014    »    திருமறைப் பக்கம்



திருமறைப் பக்கம்


அல்லாஹ்வும் ரசூலும் பார்ப்பார்கள்



இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது  செயல்களை  நிச்சயம் பார்ப்பார்கள் . பின்னர் மறைவானவை வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறியக்கூடியவன் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் !(11.9.94)

இந்தத்திருவசனம் பகைவர்களுடன் போரிடுவதற்காக முஸ்லிம்களை அழைத்த போது சாக்குப்போக்குகளைச்சொல்லி போர் செய்யாமல் தவிர்த்துக் கொண்டவர்களைப் பற்றி இறங்கியதாகும் .


அதாவது: இப்போதுநீங்கள் போர்க்களம் வராமல் பொய்யான காரணங்களைக் கூறி விலகி நிற்கலாம் . ஆனால் உங்களது தினசரி நடைமுறைகள் எவ்வாறு இருக்கிறது   என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பது இதன் கருத்து .


இந்தவசனம் இது தொடர்பாக இறக்கப்படிருந்தாலும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நிச்சயம் பார்ப்பார்கள்” என்ற தொடர் நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது .


     மறைவான விஷயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. ஆனால் “அல்லாஹ்தான் விரும்பிய அடியார்களான   திருத்தூதர்களுக்கு மறைவானவற்றை வெளியாக்குவான்” என்பது குர்ஆன் வசனப்படி உறுதிப்படுத்தப்பட்ட விஷயம்.


பெருமானாருக்கு எதிரே வாழ்ந்த சஹாபாக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை அல்லாஹ்வின் திருத்தூதர் நிச்சயம் அறிவார்கள்அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்து விடுவான் என்ற ஆழமான நம்பிக்கையில் வாழ்ந்தார்கள்.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதாவதொரு விஷயத்தைப்பற்றி சஹாபாக்களிடம் கேட்டால் அல்லாஹு வரஸுலுஹுஅஃலம்அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே அறிவார்கள் என விடையளிப்பார்கள்.


கடைசி ஹஜ்ஜின் போது இன்று என்ன கிழமை? என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கசஹாபாக்களுக்கு அன்று வெள்ளிக்கிழமை எனத் தெரிந்தால் கூட “அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே அறிவார்கள்என பதிலளித்தது அனைவரும் அறிந்த செய்தி.


சஹாபாக்கள் மட்டுமல்ல; அந்த நகரில் வாழ்ந்த  காபிர்களான எதிரிகள் கூட தங்களின் சதிச்செயல்கள் பெருமானாருக்குத்தெரிந்து விடும் என்ற அச்சத்தில் தான் வாழ்ந்து வந்தார்கள் .


முஸ்லிம்கள்- முஃமின்களாகிய நாம் அனைவரும்பெருமானாருக்கு நம் செயல்கள் அனைத்தும் தெரியும்   என அவசியம் நம்ப வேண்டும் .


 இதற்கு இரண்டு ஹதீஸ்கள் ஆதாரமாக இருக்கின்றன

 

ஒன்று : எனக்கு கியாமத்து நாள்வரை நடப்பவை அனைத்தும் எடுத்துக்காட்டப்பட்டது என்ற எம்பெருமானாரின் திருவாக்கு .  


இரண்டு : நான் மறைந்தபின்  வாரம் இரு முறை உங்களது நல்ல செயல்கள் தீய செயல்களின் பட்டியல் எனக்கு எடுத்துக்காட்டப்படும். அதில் நல் அமல்களைக் கண்டால் நான் மகிழ்ச்சியடைவேன்அதில் உங்கள் பாவச் செயல்களைக் கண்டால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத்தேடுவேன் .


இதிலிருந்து ஒரு விஷயம் விளங்குகிறது.


நம் செயல்கள்  அது நடப்பதற்கு முன் அல்லாஹ்அதனை நிச்சயம் அறிகின்றான் .

     

நம் செயல்கள் நிகழ்ந்த பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அது எடுத்துக்காட்டப்பட்டுவிடுகிறது .


இப்போது கூறுங்கள். நம் செயல்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும்  அறிந்தவர்கள்தாமே !


இங்கே இன்னுமோர் எச்சரிக்கை. மனிதன் ஒருவன்தான் தீய செயல் செய்வதற்கு முன் , நாம் செய்யும் இந்தச் செயல்   பெருமானாருக்கு எத்திவைக்கப்படுமே ! அதனால் இதனைச் செய்வது தகுமா ? என   யோசிக்க வேண்டும் .