மாணவர்களுக்கு...
திருப்பு முனை!
இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் ஜுர்ஜான் என்ற நகரில் ஓதிவரும் காலத்தில் ஏராளமான குறிப்புகளை எழுதிக்கொள்வார்கள். ஒரு தடவை ஜுர்ஜானிலிருந்து தூஸ் நகரத்திற்கு வரும்போது அவர்களின் யாத்திரைக் குழுவை கொள்ளைக் கூட்டமொன்று தாக்கி பிரயாணிகளின் உடமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டது. இமாம் அவர்கள் தங்கள் பொருள்கள் போனது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் தாம் இரவு பகலெல்லாம் எழுதிச் சேர்த்து வைத்திருந்த குறிப்புகளையும் கள்வர்கள் கவர்ந்து கொண்டார்களே எனக் கலங்கினார்கள். கொள்ளையர் தலைவனிடம் கேட்டால் அவன் தம்மைக் கொன்றுவிடக்கூடும் என்ற பயம் இருந்தும், கற்ற கல்வியை இழந்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில்...
உங்களுக்கு இந்தக் குறிப்புகளடங்கிய புத்தகங்களால் ஒரு சிறிதும் பயனிராது. தயவு செய்து அவற்றை மட்டும் திருப்பித் தந்து விடுங்கள் என வேண்டிக் கொண்டார்கள்.
ஏன், இந்தக் குறிப்புகளில் என்ன இருக்கிறது? என்று வினவினான் கள்வர் தலைவன். தாம் கற்ற செல்வமெல்லாம் அவற்றில் இருப்பதாக இமாமவர்கள் சொன்னதும் கள்வர் தலைவன் கட கட வெனச் சிரித்துவிட்டான்.
நீ கற்ற செல்வத்தை நான் எடுத்துக்கொண்டதும் நீ அதை இழந்து விட்டாய். அதாவது உன்னிடம் கல்வி இல்லை.அதைத்தான் நான் எடுத்துக்கொண்டேனே! இந்தக் குறிப்புகள் போனதும் நீ கல்வியையே இழந்துவிட்டதாகக் கலங்குகிறாயே? இதுவும் ஒரு கல்வியா தம்பி என கள்வர் தலைவன் எள்ளி நகைத்து குறிப்புப் புத்தகங்களைத் திரும்பக் கொடுத்துவிடுமாறு கட்டளையிட்டான்.
கள்வனின் வாக்கு இமாமவர்களைச் சிந்திக்க வைத்தது. தூஸ் நகரம் திரும்பியதும் தாம் குறித்து வைத்திருந்தவற்றையெல்லாம் மூன்று ஆண்டுகள் முயன்று மனப்பாடம் செய்து கொண்டார்கள்.
இனி தம்மிடமிருந்து எது களவு போனாலும் தம் கல்விமட்டும் களவு போகக்கூடாது என உறுதி பூண்டார்கள்.