• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

இலக்கியம்

பாட்டில் சிறந்தது தாலாட்டு

பெருங் கவிஞர் , அதிரை தாஹா மதனீ


திருநெல்வேலியில் அமைந்த மேலப்பாளையத்தில் பிறந்தவர் அசனலியார். முஹம்மதலியார் என்பவரின் மகன்எகிப்திலிருந்து வந்தவர்கள். அவர் இயற்றியவற்றில் சிறப்புமிக்கது பஞ்சரத்தினத் தாலாட்டு , பூவடிச்சிந்து போன்றவை .அவர் தாலாட்டு 5 பிரிவுகளைக் கொண்டது .

  1.  உடற்கூறறியும் ஞானத் தாலாட்டு
  2.  ஃபாத்திமா ( ரலி )- அவர்களைப்ப ற்றிப் பாடும் சுகானந்தத் தாலாட்டு .
  3.  முஹிய்யுத்தீன் ஆண்டகைப் பேரில் மணி மந்திரத்தாலாட்டு .
  4.  ஷாஹுல் ஹமீது நாயகம் பேரிலான மீரான் தாலாட்டு .
  5.  பாலகர்களை வாழ்த்தும் பாலகர் தாலாட்டு .
  6.  நான்கு கலீபாக்களையும் ஒரே பாட்டில் பூட்டி தாலாட்டுப் பாடியுள்ளார்



வள்ளல் அபூபக்கரினுமறின் மன்னுதுமானலியின் றெள்ளவருள் 
பொருட்டால் திக் நடனப் பொது முறங்கி முழி .

என்ற பாடல் எடுத்துக்காட்டாகும் .



வாய் வழித்தா லாட்டைப் போலில்லாமல் பொருள் செறிந்த ஆன்மீக அறவுரைகளை உள்ளடக்கிப் பாடியிருக்கிறார் இத்தாலாட்டை .


கண்ணை இமை பாதுகாப்பதைப் போல இறைச் சிந்தனைகளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாடுகிறார் ..



கண்ணுக்குள்ளேயணுகா தெல்லாத்தையும்காக்குமிமையது போ 
லெண்ணுக்குள்ளே மறைவேயரும் இறையிடம்தூங்கி முழி .


கண்மணித் தாலாட்டு இஸ்லாமியத் தாய்மார்கள் பெரிதும் விரும்பும் தாலாட்டுபிஸ்மி துவக்கம் செய்து என் கண்ணே பெரியோன் தனைப் புகழ்ந்து எனத் தொடங்கப் பாடுகிறார் முஹம்மது மீரான் சாஹிப்புலவர் . இவரது பெயரையும் , இவர் குரு முஹம்மது இப்ராஹீம் என்ற பெயரையும் தவிர வேறு எந்த விபரங்களும் கிடைக்கவில்லை .


இரமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் . ஆசுகவி முஹம்மது மீர் ஜவாது புலவர் ( கி . பி 1745- 1808) சேதுபதி மன்னரோடு தொடர்புடையவர் . முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி ) அவர்கள் பேரில் இயற்றிய பிள்ளைத்தமிழில் தாலப் பருவம் சிந்தையள்ளும் . 250 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டார மக்கள் பிள்ளையைத் தாலாட்டுப் பாடினார்கள் என்று சொல்லப்படுகிறதுகவிதை அருமையுணர்ந்தவர்கள் முஹிய்யுத்தீன் ஷேக்கின் மீது காதல் உள்ளவர்கள், அவர்களின் பாடல்களைப் பாடி வருகின்றனர் . பரவலாகத் தெரியாவிட்டாலும் மறைமுகமாகத் தாலாட்டு இலக்கியங்கள் பயன்படுகின்றன .



சுவைக்க சில வரிகள்



விண்ணின்புயலே யம்புயலே விளங்கும்துரையே தனித்துரையே 
வேதக்கடலேசமர்க்கடலே வித்தைப் பயிரேபண்பயிரே 
தண்ணின்பொலியுஞ் ஜயிலானித் தலைவதாலோ தலேலோ 
ஸையிதொலியேகெளதுஸம தானிதாலோ தலேலோ !



அரபி மொழியில் சுப்ஹான மவ்லிதுத் தாலாட்டு யார் எழுதியது என்று தெரியாது . மாதிஹுர் ரசூல் , சதக்கத்துல்லாஹ் அப்பா ( ரஹ் )(1632 - 1703 கி . பி ) அவர்கள் அறபுத் தமிழில் யாத் தளித்தார்கள் . சுற்று வட்டார மக்கள் தாலாட்டாகப் பாடி குழந்தைகளைத் தூங்கி விழிக்கச் செய்தார்களாம் .



உண்மை இஸ்லாம் ஈமான் வழிதந்த 
அல்லாஹ்புகழ் உனக்கே இரகசியமாகவும்பகிரங்கமாகவும் 
ஸலவாத்சொல் நபிக்கே !( பெரும்புகழுடையோனே )


மதுர கவி செய்யது அப்துல் காதிர் புலவர் . இவர் முத்துப் பேட்டையைச் சேர்ந்தவர். பயஹம்பர் அவதாரப் பல வண்ணச் சிந்து என்று ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியளித்துள்ளார் . இது ஆனந்த பைரவி ராகத் தோடும் ஆதிதாளத் தோடும் பாடக்கூடியது என்றும் ஆசிரியரே குறிப்பிடுகின்றார் .



ராரி ரி ராராரோ - என் கண்மணியே

ராரி ராராரோ - நான் பெற்ற மகனே - ராரி ரிரோ ராராரோ ... என்றுதொடங்குகிறார் .


சுமார் 150  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் .ஞானியார் சாஹிபு கோட்டாறு என்னும் தளத்தில் பிறந்தவர்கள் . தந்தை பெயர் ஷைகு அபூபக்கர் சாஹிபு . தாயார் பெயர் சையிது மீரான் பீவி . ஞானியார் சாஹிப் . கி . பி 1755- இல் பிறந்தார்கள். கி.பி 1794- இல் மறைந்தார்கள்.(ஹிஜ்ரி 1167- 1209 - ஜமாதுல் அவ்வல் மாதம் /4 ஆம்நாள் )
மெய்ஞ்ஞான திருப்பாடற்றிரட்டு என்ற நூலில் அவர்களது ஞானம் முழுவதும் திரட்டப்பட்டுள்ளது .


அப்பாவின் பாடல்களை வட்டார மக்கள் படித்துப் படித்து மனச் சோலையிலே பயிரிட்டவர்கள் . குழந்தைகளைத் தாலாட்டாத தாயுண்டோ ?.  நெஞ்சில் கொஞ்சி விளையாடும் பாடல்களையே தாலாட்டாகவும் பாடினார்கள் . தொட்டிலில் கேட்ட பாட்டைக் கொண்டு பட்டித் தொட்டிகளிலெல்லாம் ஞானப் பிள்ளைகள் முளைத்தனர் . சினிமாப் பாடல்கள் இல்லங்களில் படையெடுத்த இந்நாளிலும் , அப்பாவின் பாட்டு தாலாட்டாகப் பரிணமித்திருக்கிறது .



அல்ஹம்தெனவே நீயெ வைக்கும் மடங்காநிரப்பம் உடையானே அல்ஹம்தெனவே யென்னுள்ளத்தி லறிவைதிடமா யாண் டோனே இல்லந்தனிலே நீதவறா திருக்குஞ் சுடரேயென் கோனே 
இல்லமறிந்துன்தனைவணங்க விதந்தா ஹூயில்லல்லாவே !



அப்பாவின் இப்படிப்பட்ட பாடல்களையும் பாடி குழந்தைகளைத் தூங்கச் செய்திருக்கிறார்கள்ஞானியார் அப்பாவின் மற்றொரு பாட்டு கும்மி. தாய்மார்களுக்கு ரொம்பப் பிடித்தது . கும்மிப் பாட்டைக் கேட்டு கம்மென்று தூங்கினார்கள் பிள்ளைகள் .



கும்மியடி பெண்ணே கும்மியடி - நல்ல குஞ்சித ரஞ்சிதக் கும்மியடி 
செம்மலாம் ஹாமீமுஹம்மது பாதத்தைத் தேடிக் கும்மியடிப்பமடி நிதம் 
நாடிக் கும்மியடிப்பமடி 
என்னுள்ளிருந் துயிரெங்கும் நின்று 
சக மெல்லா வுயிர்க்கும் நிரம்பி நின்று 
எங்கு மெங்கணுந் துங்கமங்களந் தங்கு மங்குறுந் தெண்ட ருளமிசை தந்த தொந்திமி திந்திம் தீமெனதானே நடமிடும் ஹாமீ முஹம்மதைச் சார்ந்து கும்மியடிப்பமடி - மனஞ்சேர்ந்து கும்மியடிப்பமடி .



ஜீவரத்தின கவிராஜர் சையது மீறா லெப்பை அண்ணாவியார் யாத்த சிற்றிலக்கியம் மதீனக் கலம்பகம் என்பதாம் . தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய ஞானக் கோட்டைகளில் ஒன்று அதிராம்பட்டினம் . அந்த ஆன்மிக மண்ணில் பிறந்தவர். ஹிஜ்ரி 1275- இல் வாழ்ந்தவர் . இவர் ஓர் அருட்கவிஞர் .


இவர் இயற்றிய கலம்பகத்தில் ஊசல் ஓர் உறுப்பாக வரும் . ஊஞ்சற் பாட்டை அக்காலப் பெண்கள் மிக்க ஆர்வத்துடன் பாடுவார்கள் . ஒரு பெண் பாட்டைக் கேட்டுக் கற்றுப் பாடுவார் . அதை மற்றப் பெண்களும் மனப்பாடம் பண்ணிக் கொள்ளும் பழக்கமும் இருந்தது . கடினமான பாடல்களையும் மனப்பாடம் செய்து விடுவர் . சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்டிர் பாடினர் .



ஆடவாங்கஊஞ்சல் ஆட வாங்க அன்புநபிபொன்னூஞ்சல் ஆடவாங்க (
அன்பாய்என் ஈமானைக் காலாய் நாட்டிஆன குரு உபதேசஞ் சட்டம்சேர்த்து 
இன்பானதீனில் அமை பலகை கோத்திட் ( டு ) இச்சையெனும் சங்கிலியை இசைவாய்ப்பூட்டி 
வன்பாகம் இருளோட்டி ஆடீர் ஊசல் ! மதினாமா நகர்க்கரசே ஆடீர் ஊசல் ! முன்பாய்உண்டானவரே ஆடீர் ஊசல் ! முஹம்மதுர் - ரசூல்நபியே ஆடீர் ஊசல் !



என்று பாடி தாலாட்டாகவும் பாடினார்கள் .


தாய் நாவை அசைத்து ஒலியை இசைப்பதெல்லாம் தாலாட்டுத் தான் ! ஆண் குழந்தைத் தாலாட்டு , பெண் குழந்தைத் தாலாட்டு என்று பகுத்துப் பாடிய புலவர்களும் உண்டு .கவிஞானி மஹ்பூப் சுப்ஹானி 290 பாடல்கள் கொண்ட மதுரத் தாலாட்டுப் பாடியளித்துள்ளார் .


ஆலிம் கவிஞர் தேங்கை . மு . ர்புதீன் மிஸ்பாஹி அவர்கள் தொட்டில் முனாஜாத் என்ற தாலாட்டைப் பாடியுள்ளார் . இலங்கையைச் சேர்ந்த திருமதி சாரணா கையூம் அவர்களின் இஸ்லாமியத் தாலாட்டு மாலை சிறந்த நெறிகளை வளர்க்கும் பாடல்களாக விளங்குகின்றன . பக்தி மார்க்கம் மேலோங்கியக் காலத்தில் ஞானத் தலைவர்கள் பாட்டுடைத் தலைவர்களாக தாலாட்டில் இடம் பெற்றுள்ளார்கள் . எல்லாக் காலங்களையும் அனுசரித்தே கவிஞர்கள் தம் கருத்துக்களைத் தாலாட்டில் பயன்படுத்தியுள்ளனர்


பாட்டிற் சிறந்தது தாலாட்டு !”