• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்



1. சிருஷ்டிகள் ஏன் வெளியாக வேண்டும் ?


ஹக்கு தன்னை, தன் சக்திகளை வெளியாக்கிப் பார்க்கவே சிருஷ்டிகள் தோன்றின, தோன்றுகின்றன, தோன்றும். இதனை முக்கிய சிருஷ்டியான மனிதன் உணர வேண்டும்.( மனிதன் மட்டும் தான் உணரவும் முடியும் ) அனைத்திலும் ஹக்கின் சக்தியை , அதன் மகத்துவத்தைக் காண முயற்சிக்க வேண்டும். கண்டு ரசிக்க வேண்டும். அப்போது தனக்குப் புறம்பே அதாவது தனக்கு அப்பால் உள்ள அனைத்திலும் ஹக்கின் ஆட்சியைக் காண முடியும் . அக்கணமே தானும் தன்னிலிருந்தும் செயல்படுவது ஹக்கின் சக்தியே என்பதையும் உணர முடியும் . அப்போது தான் தான் தனியாக இருப்பதாகவும், ஹக்கிலிருந்து தன்னைப் பிரித்துப் பார்க்கும் தடிப்பான ஏன் மிகத் தடிப்பான எண்ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முடியும். எண்ணங்கள் முற்றிலுமாக அழியக்கூடிய நிலைதான் ஃபனாவாகும்.


2. நன்மை , தீமை எது வரை ?


தீமை, தீமை எனத் தெரிவது வரை அது தீமை தான். அதைச் செய்தால் தண்டனை உண்டு .


3. எல்லாம் ஒன்று என்பதன் விளக்கம்


இவ்வுலகத்தில் பொருட்கள் எல்லாம் வேறு வேறாகத் தோன்றுகின்றனவே. ஒன்று என்று எப்படி எண்ண முடியும்..?  ஒரு மரத்தில் இலை வேறு, பூவேறு, காய் வேறு , கிளை வேறு இப்படிக் காண்கிறோம். ஆனாலும் அவையெல்லாம் ஒன்றே. மரம் என்ற சொல்லில் அவ்வளவும் அடங்கியதே. அவையனைத்தின் மூலமும் ஒன்று. உயிர் ஒன்று அதுபோல இவ்வுலகில் வேறு வேறாகக் காணப்படும் எல்லாப் பொருட்கள் எல்லா எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒன்றே, உயிர் ஒன்றே.


4. ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை பற்றி :


அல்லாஹ் ஒருவன் என்னும் அரிய ஞானத்தை விளக்கி ஷிர்க்கினை ஒழிக்கும் சபை .


தொகுத்தவர் : எஸ் . காஜா நஜ்முத்தீன் , திண்டுக்கல் .