புரட்சிகள் செய்த பூமான் நபி!
கலீபா ஆலிம் புலவர்
பூமான் நபிபோல் புரட்சிகள் செய்தவர் பூமியில் யாருமில்லை
புதுமைக் கருத்தால் உலகை மாற்றிய புண்ணியர் எவருமில்லை
சமான்யருக்கும் சமத்துவம் தந்த தலைவர் எவருமில்லை
சாதிகள் பேதங்கள் தகர்த்தே எறிந்த சாதனை எங்குமில்லை
உழைப்பவர் கைக்கு முத்தம் தந்து உழைப்பின் உயர்வைச் சொன்னார்கள்
ஊழியர் வியர்வை உலரும் முன்னே ஊதியம் அளிப்பீர் என்றார்கள்
தாயின் காலடி சொர்க்கம் என்று தாய்மைக்கு மதிப்பு தந்தார்கள்
முதன் முதலாக விதவையை மணந்து விதவைக்கு விடியல் கண்டார்கள்
கருத்தவர் வெளுத்தவர் நிறவேற்றுமையை காலில் போட்டு மிதித்தார்கள்
கல்வி உங்கள் காணாமல்போன பொருள் தேடிப்படிப்பீர் என்றார்கள்
ஒவ்வொரு மனிதனும் இறைவனின் குடும்ப உறுப்பினர் என்றே உரைத்தார்கள்
அடுத்தவர் பசிக்க தான் மட்டும் உண்பவர் முஸ்லிமே அல்ல வெறுத்தார்கள்
பாவங்களுக்குத் தலையைப் போன்றது பாழும் குடிதான் என்றார்கள்
கோபத்தை அடக்கும் மனிதன் அவனே உண்மை வீரன் என்றார்கள்
பதவியைக் கேட்கும் பதர்களுக்குத்தாம் பதவி தராதீர் என்றார்கள்
மருந்தே இல்லா நோயும் இல்லை மருத்துவம் தேடுவீர் என்றார்கள்
யோகாசனத்தின் பலனை எல்லாம் தொழுகைக்குள்ளே வைத்தார்கள்
வர்மக் கலையின் தொடு சிகிச்சையின் விளைவை உளூவில் அமைத்தார்கள்
அரைவயிறுணவு கால்வயிறுநீர் ஆரோக்கிய இலக்கணம் வகுத்தார்கள்
ஓயாது இயங்கும் உறுப்புகள் ஓய்ந்து உயிர் பெற நோன்பைக் கொடுத்தார்கள்
வறுமைக் கோட்டை அழித்திட ஏழை வரியாம் ஜக்காத் விதித்தார்கள்
உலகமனைத்தும் ஒரு கிராமம் எனும் உணர்வை ஹஜ்ஜில் விதைத்தார்கள்
தீவிரவாதம் வன்முறையெல்லாம் தீனில் இல்லை தடுத்தார்கள்
எங்கும் சாந்தி அமைதி தவழ இஸ்லாம் எனும் பெயர் வைத்தார்கள்
அறிவியல் விஞ்ஞான உண்மை தன்னை ஆன்மிக வடிவில் படைத்தார்கள்
துறவறம் பேணும் முனிவர்கள் தவத்தை இல்லறவாழ்க்கைக்குள் சமைத்தார்கள்
உன் மனசாட்சி சொல்வது எதுவோ அதுவே உண்மை என்றார்கள்
உனக்கு விரும்பும் அதையே நீதான் பிறருக்கு விரும்பு என்றார்கள்
தண்ணீர் காற்று நெருப்பு மனிதர் அனைவரின் உரிமை என்றார்கள்
போரில் முதியவர் குழந்தை மகளிரை பூப்போல் காப்பீர் என்றார்கள்
தீயதைக் கண்டு தடுக்காதோர்க்கு தீமையில் பங்கு கொடுத்தார்கள்
பாவங்கள் மிகைக்கும்போது இயற்கை பழிவாங்கும் என்றே உரைத்தார்கள்
மனிதனுக்காக எல்லாம் படைத்தான் மாபெரும் இறையோன் என்றார்கள்
மனிதனை மட்டும் தனக்காய்ப் படைத்தான் மாபெரும் வல்லோன் உரைத்தார்கள்
உலக வாழ்க்கை சத்திரம் போன்றது உணர்வு பெறுவீர் என்றார்கள்
மறுமை வாழ்வே நித்தியமானது மனதில் வைப்பீர் என்றார்கள்
சகுனம் பார்ப்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல அறிவீர் என்றார்கள்
காலத்தை நேரத்தை சபிக்காதீர் அந்தக் காலம் இறைவன் என்றார்கள்
அடுத்தவர் வணங்கும் தெய்வத்தைப் பழித்து அலைந்திட வேண்டாம் என்றார்கள்
அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு நம்மார்க்கம் நமக்கென்றார்கள்
அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு நம்மார்க்கம் நமக்கென்றார்கள்
அடுத்தவர் துன்பம் கண்டு மனதால் ஆனந்தம் கொள்வதைத் தடுத்தார்கள்
உண்மை கசப்பாயிருந்தாலும் அதை உரக்கப் பேசுவீர் என்றார்கள்
கோபம் கொண்ட நிலையில் தீர்ப்பு கொடுக்காதீர் எனத் தடுத்தார்கள்
இறைவன் மென்மையானவன் அதையே விரும்புகிறான் எனப் பகர்ந்தார்கள்
காரணமின்றி தலாக்கு கொடுத்தால் அர்ஷே நடுங்கும் என்றார்கள்
பெண்கள் கண்ணாடிப் பாத்திரம் போன்றோர் பத்திரம் பத்திரம் என்றார்கள்
மனைவிக்குப் பிடித்தவர் எவரோ அவரே மனிதரில் நல்லவர் உரைத்தார்கள்
குழந்தைகளுக்கு நாம் தரும் சொத்து கல்வியும் ஒழுக்கமும் என்றார்கள்
நேர்மையான வணிகர் சுவனத்தில் நபிமார்களுடனே என்றார்கள்
இலஞ்சம் பதுக்கல் ஊழல் சமூகக் குற்றம் என்றே தடுத்தார்கள்
குழப்பம் செய்வது கொலையை விட ஓர் கொடிய குற்றம் உரைத்தார்கள்
பாதிக்கப்பட்டவர் மன்னித்தால்தான் பரமனும் பொறுப்பான் என்றார்கள்
சிந்தனை செய்வது வணக்கத்தை விடவும் சிறந்தது என்றே சிலிர்த்தார்கள்
அறிஞனின் மைத்துளி தியாகியின் இரத்தத் தைவிட உயர்ந்தது என்றார்கள்
அறிஞர்கள் தவறு செய்தால் இரண்டு தண்டனை என்றே உரைத்தார்கள்
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமம் ஆக்கிவைத்தார்கள்